ஏ.டி.எம்.கள் முழுமையாக சீராக இன்னும் 3 வாரமாகும்.. அருண் ஜெட்லி
ஏ.டி.எம்.,களில் இருந்து 500, 2000 ரூபாய் பணம் கிடைக்க இன்னும் 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லி: புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்து ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்பட இன்னும் 3 வாரம் ஆகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏ.டி.எம். இயந்திரங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதனால் நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை வைத்து முழுமையாக செயல்பட இன்னும் இரண்டு முதல் 3 வாரங்கள் ஆகும்.
அதுவரை ஏடிஎம்களில் இருந்து 100 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். புதிய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க வசதியாக அதன் அமைப்பை முன்கூட்டியே மாற்றி இருந்தோம் என்றால் ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட ரகசிய முடிவு வெளியே வந்து இருக்கும். அதை தடுக்கவே எந்த வித முன்அறிவிப்பும், வசதியும் செய்யவில்லை.
மத்திய அரசின் அறிவிப்பால் சாதாரண மக்கள் வங்கிகளுக்கு வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதற்காக வருந்துகிறேன். இந்த சிரமத்தை கடந்துவிட்டால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிடும். பொதுமக்களுக்கு இதனால் நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.