தண்ணீர் திறக்க முடியாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் மீண்டும் அடம் பிடிக்கும் சித்தராமையா
பெங்களூர்: காவிரி நீர் வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வாதம் நிறைவடையாத நிலையில் இன்றும் விசாரணை தொடரும் என நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த உத்தரவின்படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு 2000 கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எக்காரணம் கொண்டும் நிறைவேற்றுமாறு கர்நாடகா அட்வகேட் ஜெனரல் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தவேண்டும். இரு மாநிலங்களும் சட்டம் ஒழுங்கை மதித்து பொது சொத்துகளுக்கு மதிப்பளித்து பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த புதிய உத்தரவுக்கு கர்நாடகாவில் மீண்டும் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. மண்டியா, மைசூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது என்று அறிவித்துள்ளார்.
கர்நாடகா அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு இல்லை. எனவே தமிழ்நாட்டுக்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்? ஆகையால் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடம் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள உத்தரவு நகல் இன்னும் எங்களுக்கு கிடைக்க வில்லை. அது கிடைத்ததும் வக்கீல்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும். அதன் அடிப்படையில் கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications