திருமண வீட்டில் பிடித்த பாலிவுட் பாடல்களை ஒலிபரப்பாததால் மணமகனின் தந்தை கொலை
ஹரித்வார்: உத்தரகண்ட் மாநிலத்தில் திருமண வீட்டில் தனக்கு பிடித்த பாலிவுட் பாடல்களை ஒலிபரப்பாததால் வாலிபர் ஒருவர் மணமகனின் தந்தையை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள சகோதி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமண வீட்டில் பாலிவுட் பாடல்களுக்கு விருந்தினர் நடனம் ஆடினர். அப்போது மணமகனின் தந்தை விஷ்வாஸ் ராம் வந்து பாடல் ஒலிபரப்பை நிறுத்துங்கள் திருமண சடங்குகளை துவங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு குடிபோதையில் இருந்த தெலுராம் தலைமையிலான வாலிபர்கள் விஷ்வாஸிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். தங்களுக்கு பிடித்த பாலிவுட் பாடல்களை தொடர்ந்து ஒலிபரப்ப வேண்டும் என்றும், அதற்கு தாங்கள் நடனம் ஆட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து லிஷ்வாஸுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விஷ்வாஸை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த விஷ்வாஸை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராமத்தினர் தெலுராம், மதன்பால் மற்றும் சுமித் சிங் ஆகியோரை அடித்து நொறுக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கிராமத்தினர் தாக்கியதில் காயம் அடைந்த மதன்பால் மற்றும் சுமித் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.