காவிரி பிரச்சனைக்காக சாகப் போவதாக மோடியை மிரட்டினேன்: தேவகவுடா பரபரப்பு தகவல்
காவிரி பிரச்சனைக்காக உயிரைவிடுவேன் என மிரட்டியதாலே பிரதமர் மோடி தலையிட்டார் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
பெங்களூரு: காவிரி பிரச்சனைக்காக தாம் சாகப் போவதாக பிரதமர் மோடியை தாம் மிரட்டியதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்திய தோட்டக்கலைத்துறை முன்னோடியான கர்நாடகாவின் மரி கவுடா நூற்றாண்டு விழா கர்நாடக ஒக்கலிகர் சங்கத்தின் சார்பில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பங்கேற்று பேசியதாவது:
காவிரி நதிநீர் பிரச்சனை முடிந்துவிடவில்லை. நமது தலை மீது தொங்கிக் கொண்டிருந்த கத்தி ஜஸ்ட் விலகியிருக்கிறது.
நமக்கு குடிக்கவே நீர் இல்லாத நிலையில் விவசாயத்துக்காக தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது சரியானது அல்ல.
உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்பதற்காக உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது பிரதமர் அலுவலக அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு பேசினர்.
அவர்களிடம், நான் காவிரி பிரச்சனைக்காக 3 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து சாகப் போகிறேன். 3-வது நாளன்று என்னுடைய உடலுக்கு பிரதமர் மோடி வந்து அஞ்சலி செலுத்தட்டும் என மிரட்டினேன். அதனால்தான் காவிரி பிரச்சனையில் மோடி தலையிட்டார்.
இவ்வாறு தேவகவுடா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.