இளங்கோவனுக்கு கிடுக்கிப்பிடி போடும் தேசிய மகளிர் ஆணையம்.. நோட்டீஸ் அனுப்பிய லலிதா குமாரமங்கலம்
டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையமும் களத்தில் இறங்கியுள்ளது. இதன் தலைவராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த லலிதா குமாரமங்கலம், வளர்மதி என்பவர் இளங்கோவனுக்கு எதிராக கொடுத்த புகார் குறித்து விளக்கம் தருமாறு இளங்கோவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் பணிபுரிந்த வளர்மதி என்ற பெண் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் மற்றும் காமராஜர் அரங்கத்தின் மேலாளர் நாராயணன் ஆகியோர் மீது புகார் தெரிவித்திருந்தார். அதில் இருவரும் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக இளங்கோவன் மீது 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
வளர்மதி அளித்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழும் கடுமையான சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது தானாக முன்வந்து தேசிய மனித உரிமை ஆணையமும் தலையிட்டுள்ளது.
இளங்கோவனுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். 5 நாட்களில் விளக்கம் தருமாறு இளங்கோவனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறுகையில், வளர்மதி புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் போயுள்ளது என்றார்.
ஆனால் தனக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை என்றும், வந்தால் உரிய விளக்கம் அளிப்பேன் என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.
லலிதா குமாரமங்கலம் பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.