ஆளுக்கு 10 பேரை பா.ஜ.கவில் சேர்த்தா சம்பளம்.. மாணவர்களும் சேர்க்கனும்.. டெல்லி பள்ளியின் கெடுபிடி
டெல்லி: ரியான் இண்டர்நேஷனல் குழும பள்ளிகளில் பணிபுரியும் ஆயா முதல் ஆசிரியர்கள் வரை ஆளுக்கு 10 பேரையாவது கட்டாயம் பாரதிய ஜனதாவில் சேர்த்தால்தான் சம்பளமே கொடுப்போம் என்று உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்குழுமம் கட்டாயப்படுத்தியிருக்கிறது.
ரியான் இண்டர்நேஷனல் குழுமம் 1976ஆம் ஆண்டு மும்பையில் தங்களது முதலாவது பள்ளியைத் தொடங்கியது. தற்போது நாடு முழுவதும் 133 பள்ளிகளை அக்குழுமம் நடத்தி வருகிறது. இப்பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இக்குழுமத்தின் டெல்லி ரோகினி பள்ளியில்தான் பாரதிய ஜனதாவில் உறுப்பினர்களை சேர்க்கச் சொல்லி ஆசிரியர்களையும் மாணவர்களையும் கட்டாய்ப்படுத்தி வருவதாக முதலில் புகார் எழுந்தது. பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க 18002662020 என்ற டோல் ப்ரீ எண் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிக் கூட்டத்தில் இருந்து எதற்காக இந்த எண் அனுப்பப்பட்டது என பெற்றோர் விசாரித்த போதுதான் பாரதிய ஜனதாவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது பெற்றோரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், இங்கு பணிபுரியும் அனைவருமே கட்டாயம் 10 பேரை பாரதிய ஜனதாவில் சேர்க்க வேண்டும்.. அப்படி பாரதிய ஜனதாவில் சேர்த்த விண்ணப்ப படிவங்களை ஒப்படைத்தால்தான் சம்பளமே தருவோம் என்று நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது என்கிறார்.
டெல்லி மயூர் விகார் ரியான் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், பாரதிய ஜனதாவில் உறுப்பினராக சேர்க்காதவர்களுக்கு இந்த மாதம் இன்னும் சம்பளமே கொடுக்கவில்லை.. அந்த படிவத்தைக் கொடுத்தால்தான் சம்பளம் தருவோம் என்று நிர்வாகம் கூறிவிட்டது என்று குமுறுகிறார். இதே கருத்தையே ரியான் குழும பல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் கூறி வருகின்றனர்.
இந்த பள்ளி நிர்வாகம் டெல்லி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோரின் கோரிக்கை.