பெங்களூரு சிறைக்கு படையெடுப்பு...சசிகலாவுடன் தம்பிதுரை, தினகரன், அனுராதா, வெங்கடேஷ் சந்திப்பு!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை டிடிவி தினகரன் இன்று மீண்டும் சந்தித்தார்.
பெங்களூரு : அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை டிடிவி. தினகரன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக கட்சியில் நீடிப்பது குறித்து டெல்லி சிறையில் இருந்து வெளிவந்த கையோடு சித்தியை பார்த்து யோசனை கேட்டார் டிடிவி தினகரன். அப்போது 60 நாட்கள் பொறுத்திருக்கலாம் என்று அறிவுறுத்தியதாகவும், அதன்படி தான் பொறுத்திருக்கப் போவதாகவும் தினகரன் கூறினார்.
இதனிடையே தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்து கட்சியை தினகரன் பார்த்துக் கொள்ளட்டும், ஆட்சியை முதல்வர் பழனிசாமி பார்த்துக் கொள்ளட்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வந்தனர். கட்சி அலுவலகத்திற்கு எப்போது வேண்டுமானாலம் தினகரன் செல்லலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டது.
ஜெயானந்த் தடாலடி பேட்டி
இந்நிலையில் மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்த திவாகரனின் மகன் ஜெயானந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தான் விரைவில் அரசியல் களம் காண உள்ளதாக தெரிவித்திருந்தார். அதோடு நின்றுவிடாமல் கட்சி, ஆட்சி அனைத்திலும் முடிவு எடுக்கும் அதிகாரம் சசிகலாவிற்கே உண்டு என்றும் கூறியிருந்தார். தினகரனுக்கும் தங்களுக்கும் பிரச்னை இருப்பது உண்மை தான் என்றும் அந்தப் பேட்டியில் ஜெயானந்த் போட்டு உடைத்திருந்தார்.
மன்னார்குடி குடும்பம் சந்திப்பு
ஜெயானந்தின் கருத்துக்கு பதில் கூறவிரும்பவில்லை என்று கூறிய தினகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை மூன்றாவத முறையாக சந்தித்துள்ளார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சசிகலாவை சந்தித்தவுடன் டிடிவி. தினகரன் சந்தித்துள்ளார். அவரோடு தினகரனின் மனைவி அனுராதா, டாக்டர்.வெங்கடேஷ் உள்ளிட்டோரும் சந்தித்து பேசினர்.
பாஜகவை ஆதரிக்குமா?
பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் அதிமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பாஜக சூழ்ச்சியால் சிறைக்கு சென்ற தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க ஒப்புதல் அளிப்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
தம்பிதுரை ஆலோசனை
முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என முதல்வர் முடிவு செய்வார் என கூறியிருந்த மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சசிகலாவை பெங்களூரு சிறையில் சந்தித்தார் அப்போது ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று தம்பிதுரை அறிவுறுத்தியதாக தெரிகிறது. யாரின் முடிவுபடி குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவினர் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.