குல்பூஷனுக்கு பாக். விதித்த மரண தண்டனை நிறுத்தி வைப்பு.. சர்வதேச நீதிமன்றம் சொன்னது என்ன?
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷனுக்கு பாகிஸ்தான் அளித்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.
திஹேக்: முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் சிங் ஜாதவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும் அவரை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறு என்றும் கண்டித்துள்ளார் நெதர்லாந்து நீதிபதி.
இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் ஜாதவ் வழக்கில் தீர்ப்பு வாசித்தனர். சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வாசித்தனர். குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தத் தீர்ப்பு.
வழக்கு கடந்து வந்த பாதை
குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த மாதம் 10ம் தேதி மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த 8ம் தேதி வழக்கு தொடர்ந்தது.
குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று இந்தியா கவலையும் தெரிவித்தது. இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச கோர்ட்டு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில், இரு நாடுகளும் தங்களுடைய வாதத்தை சர்வதேசநீதிமன்றத்தின் முன்பு வைத்தன.
வியன்னா பிரகடனத்தை மீறிய பாகிஸ்தான்
அப்போது, இந்தியா வாதிடுகையில், "வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டது.
பாகிஸ்தான் மறுப்பு
பாகிஸ்தான் தரப்போ, "வியன்னா பிரகடனத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக உளவு பார்ப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரை சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அரசியல் மேடையாக்கிவிட்டது" என்று வாதிட்டது. இந்த வழக்கில், இரு தரப்பு வாதங்களும் கடந்த திங்கட்கிழமையோடு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மரண தண்டனை ரத்து
வியன்னா ஒப்பந்தப்படி இவ்விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு சட்ட அதிகாரம் உள்ளது. சர்வதேச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற பாகிஸ்தான் வாதத்தை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது. பாகிஸ்தான் சட்டத்தின்படி குல்பூஷண் ஜாதவ் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக 40 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம், ஆனால் இதுவரையில் அவரது தரப்பில் முறையீடு செய்யப்பட்டதா என்பது தெரியவரவில்லை.
வியன்னா ஒப்பந்தத்தை பாக்.கடைபிடிக்கவேண்டும்
குல்பூஷண் ஜாதவின் தயாரின் முறையீடு மற்றும் மனுவானது பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என இந்தியா தெரிவித்து உள்ளது. வியன்னா ஒப்பந்தப்படி இந்தியா குல்பூஷண் ஜாதவ்வை சந்திக்க தூதரக அணுகுமுறைக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்க வேண்டும்.
மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது
இந்தியா மற்றும் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவ் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்து உள்ளன. வியன்னா மாநாட்டின் கீழ் இந்தியாவால் பெறப்பட்ட உரிமைகள் ஏற்கத்தக்கவை. இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரையில் பாகிஸ்தான் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆணையிட்டுள்ளது.