சென்னையில் இருந்து வட இந்தியர்களுக்கு பயன்படும் வகையில் ரயில்கள் இயக்கப்படுவதா? தமிழக பயணிகள் வேதனை
சென்னையிலிருந்து இயக்கப்படும் ரயில்களை திருச்சி, மதுரை, கோவை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இடங்களுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என தமிழக பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை: தமிழகத்துக்கு புதிய ரயில்கள் என்ற போர்வையில் வட இந்தியர்களுக்கு பயன்படும் வகையில் ரயில்கள் இயக்கப்படுவதாக தமிழக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநிலம் 1,30,058 கி.மீ2 பரப்பளவும் சுமார் எட்டு கோடி மக்கள் தொகையும் கொண்ட மாநிலத்தின் தலைநகராக சென்னை உள்ளது. இந்த சென்னை தமிழகத்தின் ஓர் எல்லைக்கு மிக அருகில் ஆந்திர மாநிலத்தின் வெகு பக்கத்தில் அமைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்களின் தலைநகருக்கு மிகஅதிக தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது.
அதிலும் தென்மாவட்டங்களான குமரி, துத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ளவர்கள் ரயிலில் தங்களின் தலைநகருக்கு வரவேண்டுமானால் ஓர் இரவு முழுவதும் சுமார் 13 மணி நேரம் பயணம் செய்து வரவேண்டும். தமிழகத்தின் தலைநகரான புவியியல் படி ஓர் ஓரமாக உள்ள சென்னையை தேர்வு செய்ததே தென்மாவட்டங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஆகும்.
இந்தியாவில் உள்ள 32 மாநிலங்களில் மக்கள் தொகையில் 6-வது இடத்திலும் பரப்பளவில் 11-வது பெரிய மாநிலமான தமிழகத்தில் தற்போது மொத்தம் 3846 கி.மீ தூரத்துக்கு இரயில் இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் 7 ஏப்ரல் 1873 -ம் தேதி பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அப்போது முதல் ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 1951-ம் ஆண்டு கணக்கின் படி 20 ரயில்கள் சென்னை சென்ட்ரலிருந்து இயக்கப்பட்டது.
தற்போது சென்னையிலிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடி ரயில் வசதிகள் உள்ளன். அந்த கால கட்டத்தில் சென்னை சென்ட்ரலிருந்து கோவை வழியாக கேரளாவுக்கு செல்லும் ரயில்பாதை அமைக்கும் போதே அகலபாதையாக அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கால கட்டத்தில் சென்னை பார்க் ரயில் நிலையத்திலிருந்து மைலாடுதுறை, திருச்சி, மதுரை வழியாக நெல்லை வரை அமைக்கப்பட்ட பாதை மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டது. இதனால் சென்னை சென்ட்ரல் அகலபாதையாகவும், சென்னையிலிருந்து
தென்மாவட்டங்களுக்கு வரும் பாதை மீட்டர் கேஜ்பாதையாகவும் இருந்த காரணத்தால் வடஇந்தியாவுக்கு இயக்கப்படும் நெடுந்தூர ரயில்கள் சென்னையுடன் நின்றுவிட்டது. தென்மாவட்டத்திலிருந்து ஓர் பயணி டில்லிக்கு செல்ல வேண்டுமானால் மீட்டர்கேஜ் ரயிலில் பயணித்து பின்னர் அகலபாதையில் பயணிக்க வேண்டும். பின்னர் பயணிகளின் கடும் போராட்டத்துக்கு பின்பு படிபடியாக சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை உள்ள மிட்டர் கேஜ்பாதை அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது.
கடைசிகட்டமாக மணியாச்சி - திருநெல்வேலி மீட்டர் கேஜ் பாதை அகலபாதையாக 21-10-1993 மாற்றப்பட்டது. அதன்பிறகு கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக அகலபாதையில் நேரடியாக வடஇந்திய நகரங்களுக்கு வாராந்திர ரயில்கள் புதிதாக அறிவித்து இயக்கப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன், மீட்டர்கேஜ் பாதை - அகலப்பாதை என பாகுபாடு இருந்தது. அதனால்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துடன் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தமிழகத்திற்குள் இயங்கும் ரயில்கள் மீட்டர் கேஜ்
பாதை என்பதால் எழும்பூரில் இருந்து இயக்கப்பட்டன. ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. அகலரயில்பாதை மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இரட்டைப் பாதை பணிகள் கூட வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையிலும் தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவது எதற்காக என்று புரியவில்லை. எனவே, தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னையிலிருந்து இயக்கப்படும் அனைத்து நெடுந்தூர ரயில்களையும் தென்மாவட்டங்களுக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
தென்தமிழ்நாட்டில் உள்ள பயணிகள் ரயிலில் வடஇந்திய பகுதிகளுக்கு செல்ல வேண்டுமனால் இங்கிருந்து எதாவது ஓரு ரயிலில் சென்னை எழும்பூர் சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து சென்னை சென்ட்ரலில் சென்று பகல் முழுவதும் சென்னையில் பொழுதை கழித்துவிட்டு மாலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலில் புறப்படவேண்டும். இவ்வாறு செல்வதால் குடும்பத்துடன் லக்கேஜ் கொண்டு; செல்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சென்னையிலிருந்து வட இந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தமிழகத்திலிருந்து இயக்கப்படும் ரயில்கள் என்று கூறினாலும் இந்த ரயில்கள் எல்லாம் 3846 கி.மீ ரயில்வழித்தடம் உள்ள தமிழகத்தின் வெறும் 64 கி.மீ தூரம் மட்டுமே தமிழக எல்லையில் பயணிக்கிறது. சென்னையிலிருந்து புறப்பட்டால் தமிழக எல்லைக்குள் அடுத்து எந்த ஒரு நிறுத்தமும் இல்லாமல் ஆந்திராவில் அடுத்த நிறுத்தமே உள்ளது. சென்னை சென்ட்ரலிருந்து புதுடில்லிக்கு இயக்கப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில்
தமிழக பயணிகள் பயன்படும் என்று கூறி இயக்கப்படும் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டுவிட்டால் ஒரு நிறுத்தம் கூட தமிழகத்தில் இல்லை. இவ்வாறு தமிழகத்தில் ரயில் இயக்கினால் அந்த ரயில் எவ்வாறு தமிழக பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கேரளாவில் இந்த நிலை இல்லாமல் திருவனந்தபுரத்திலிருந்து புதுடில்லிக்கு இயக்கப்படும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் ரயில் மாநிலத்தின் உள்ள அதிக பயணிகளுக்கும் நேரடியாக பயன்படுமாறு இயக்கப்படுகிறது. இதைப்போல் திருவனந்தபுரம் - புதுடில்லி ராஜதானி ரயில் கேரளாவில் உள்ள 99 சதவிகித பயணிகள் பயன்படுமாறு இயக்கப்படுகிறது. ரயில்வேதுறை மாநிலத்தின் ஓர் எல்லையில் உள்ள சென்னைக்கு ரயில்களை இயக்கிவிட்டு தமிழகத்துக்கு இவ்வளவு ரயில்கள்
இயக்கபட்டுள்ளது என கணக்கு காட்டப்படுகிறது. தமிழகத்தின் எல்லை தெற்கே சுமார் 750கி.மீ தூரம் கன்னியாகுமரி வரையிலும் மேற்கே கோவை வரையிலும் மற்ற ரயில்வழிதட பகுதிகளாக நாகூர், ராமேஸ்வரம் போன்ற பகுதிகள் வரை உள்ளது.
சென்னை ரயில்கள் நீட்டிக்க மறுப்பு:
தற்போது சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து வடஇந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை தமிகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரயில்வேத்துறை இந்த சென்னை ரயில்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீட்டிப்பு செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறது.
தற்போது சென்னையிலிருந்து வடஇந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள்
1. புதுடில்லி - சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தினசரி
2. கவுகாத்தி - சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்
3. திப்ருகர் - சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்
4. ஹவுரா - சென்னை மெயில் தினசரி
5. நிசாமுதீன் - சென்னை ராஜதானி வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்
6. நிசாமுதீன் - சென்னை கரீப்ரதம் வாராந்திர ரயில்
7. ஸ்ரீவைஷ்னதேவிகத்ரா - சென்னை வாரத்துக்கு மூன்றுநாள்
8. லக்னோ - சென்னை வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்
9. நிசாமுதீன் - சென்னை டொரோண்டோ வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்
10. விஜயவாடா - சென்னை ஜனசதாப்தி தினசரி
11. காயா - சென்னை வாராந்திர ரயில்
12. சாந்த்ராகாச்சி - சென்னை வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்
13. ஹவுரா - சென்னை கோரமண்டல் தினசரி
14. அகமதாபாத் - சென்னை நவஜுவன் தினசரி
15. நீயுஜெபல்புரி - சென்னை வாராந்திர ரயில்
16. விஜயவாடா - சென்னை தினசரி
17. சாந்த்ராகாச்சி - சென்னை வாராந்திர ரயில்
18. ஹால்டியா - சென்னை வாராந்திர ரயில்
19. ஜோத்பூர் - சென்னை வாராந்திர ரயில்
20. ஆசான்சோல் - சென்னை வாராந்திர ரயில்
21. பூரி - சென்னை வாராந்திர ரயில்
22. ஷாலிமர் - சென்னை வாராந்திர ரயில்
23. ஐதராபாத் - சென்னை தினசரி
24. சாப்ரா - சென்னை வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்
25. ஜெய்பூர் - சென்னை வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்
26. செங்கல்பட்டு - காக்கிநாடா தினசரி
27. ஐதராபாத் - சென்னை தினசரி
28. டில்லி - சென்னை ஜி.டி தினசரி
29. விசாகபட்டிணம் - சென்னை வாராந்திர ரயில்
30. புவனேஸ்வர் - சென்னை வாராந்திர ரயில்
31. பிலாஸபூர் - சென்னை வாராந்திர ரயில்
32. விசாகபட்டிணம் - சென்னை வாராந்திர ரயில்
33. பிக்கானியர் - சென்னை வாராந்திர ரயில்
34. ஸ்ரீரடி - சென்னை வாராந்திர ரயில்
35. வாஸ்கோடகாமா - சென்னை வாராந்திர ரயில்
36. ஹ{ப்ளி - சென்னை வாராந்திர ரயில்
37. ஸ்ரீசத்தியாசாய் நிலையம் - சென்னை வாராந்திர ரயில்
38. மும்பை - சென்னை மெயில் தினசர்
39. தாதர் - சென்னை தினசரி ரயில்
40. நாகர்சோல்(ஸ்ரீரடி) - சென்னை வாராந்திர ரயில்
41. மும்பை - சென்னை தினசரி
42. லோகமான்யதிலக் - சென்னை வாராந்திர ரயில்
43. செங்கல்பட்டு - காச்சுகுடா தினசரி ரயில்
44. அகமதாபாத் - சென்னை வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்
45. அகமதாபாத் - சென்னை வாரந்திர ரயில்
இந்த ரயில்கள் தவிர சென்னையிலிருந்து கேரளா, கர்நாடகம் என பக்கத்து மாநிலங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் பெங்களுர், மைசூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலிருந்து ரயில்கள் புறப்பட்டு சென்னை வழியாக பல்வேறு வடஇந்திய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போதாது என்று ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு குறைந்தபட்சம் இரண்டு ரயில்கள் வீதம் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்பட்டு வரும் ரயில்கள் அனைத்தும் வடஇந்தியர்களுக்கு பயன்படும் வகையில் அறிவிக்கப்படுகிறது.
இந்த ரயில்களால் தமிழகத்தில் உள்ள பயணிகளுக்கு மிகக்குறைந்த அளவே பயன்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு பல்வேறு பணிகள் நிமித்தம் வரும் வடஇந்தியர்களுக்கு பயன்படும் விதத்தில் உள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களில் ஒரு ரயிலுக்கு சுமார் சராசரியாக 50 தமிழக பயணிகள் மட்டுமே பயணம் செய்கின்றனர். ஆனால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் ஒரு ரயிலுக்கு சுமார் 1500 பயணிகள் வீதம் வரை தமிழக பயணிகள் மட்டுமே பயணிப்பார்கள்.
தென்மாவட்டங்களிலிருந்து சென்னை வழியாக வடஇந்திய நகரங்களுக்கு புதிதாக அறிவிக்கப்படும் ரயில்கள் எல்லாம் இயக்கப்பட்டால் மட்டுமே முழு தமிழக பயணிகள் பயன்படும் படியாக இருக்கும். தற்போது சென்னையிலிருந்து வடஇந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் தமிழகத்தில் உள்ள அனைவரும் சென்னை வந்துவிட்டு பின்னர் சென்னையிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் பயணிக்கின்றனர். கடந்தகால வரலாற்றை பார்த்தால் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கேரளாவிலிருந்து பல்வேறு ரயில்கள் தமிழகத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் சென்னையிலிருந்து தமிழகத்துக்குள் நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்களை கணக்கில் எடுத்தால் இதுவரை இரண்டு ரயில்கள் மட்டுமே உள்ளது. ஆனால் பெங்களுர், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய பகுதிகளிலிருந்து தமிழகத்துக்கு பல்வேறு ரயில்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. கேரளா மற்றம் கர்நாடகாவிலிருந்து ரயில்கள் நீட்டிப்பு என்பது எளிதாகவும் சென்னையிலிருந்து தமிழகத்துக்கு உள்ளே ரயில்கள் நீட்டிப்பு என்பது மிக கடுமையான சவாலான காரியம் ஆகும்.
இது குறித்து குமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது, தென்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்பி ரயில்வே அமைச்சரின் சிறப்பு கவனத்தை ஈர்த்து சென்னையிலிருந்து இயக்கப்படும் ரயில்களை திருச்சி, மதுரை, கோவை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.