கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் 100 மடங்கு வேகத்துடன் போராட்டம் தொடரும்.. போராட்டக்குழுவினர் அறிவிப்பு
மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாவிட்டால் 100 மடங்கு வேகத்துடன் மீண்டும் போராட்டம் தொடரும் என நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 22 நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நெடுவாசல் போராட்டத்துக்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் போலவே சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், திரைக்கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதனிடையே போராட்டக் குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்படாது என்று உறுதிமொழி அளித்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டக்குழுவினரை சந்தித்து இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மக்கள் விருப்பம் இல்லாத எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்காது என்றும் நெடுவாசல் மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் எடுத்துரைப்பதாகவும் அவர் கூறினார். மேலும் போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போராட்டக் குழுவை சந்தித்து விளக்கி கூறினார். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து போராட்டக் குழு பிரதிநிதி கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு ஆதரவளிக்காது என்று தமிழக அரசு வலியுறுத்தியதாலும் போராட்டம் தற்காலிகாகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் இடம் அருகே உள்ள அரசு பள்ளியில் பொதுத்தேர்வு நடப்பதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக நிறைவேற்றாவிட்டால் 100 மடங்கு வேகத்துடன் போராட்டம் மீண்டும் தொடங்கும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications