"வெந்தும் வேகாமலும்" வரும் புதிய ரூ. 500 நோட்டுக்கள்.. அவசரமாக அச்சடித்ததால் தவறு: ஆர்பிஐ
புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெவ்வேறாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகளே வெவ்வேறாக இருப்பதால் பொதுமக்களிடையே படுபயங்கர குழப்பம் ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை அவசரம் அவசரமாக அச்சிட்டதால் இத்தகைய தவறு நேர்ந்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கியும் ஒப்புக் கொண்டிருப்பது பொதுமக்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு முடிவு கட்டிய மத்திய அரசு அதற்கு மாற்று ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ளவில்லை. இதனால் 2 வார காலமாக இந்தியா முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
மெல்ல மெல்ல புதிய ரூ2,000 நோட்டுகளை விநியோகித்த மத்திய அரசு தற்போது புதிய ரூ500 நோட்டுகளை இறக்கிவிட்டிருக்கிறது. ஆனால் இந்த புதிய ரூ500 நோட்டுகளை பயன்படுத்துவதில் பொதுமக்களுக்கு கடும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த புதிய ஒரிஜனல் ரூ500 நோட்டுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக காணப்படுகின்றன. அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் எழுத்துகள், பாதுகாப்பு அம்ச கோடுகள் போன்றவை ஒரே சீராக இல்லாமல் வெவ்வேறாக காணப்படுகின்றன.
இதனால் கையில் இருப்பது ஒரிஜனல் ரூ500 நோட்டா? அல்லது கள்ள 500 ரூபாய் நோட்டா என்ற குழப்பம் மக்களிடத்தில் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் அல்பனா கில்லாவலா, ரூபாய் நோட்டுகளை அவசரம் அவசரமாக அச்சடித்ததால் இத்தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த நோட்டுகளை பொதுமக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம். அல்லது ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்துவிடலாம் என கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த அலட்சியம் பொதுமக்களிடத்தில் மிகக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.