எதிர்க்கட்சிகளை கொச்சைப்படுத்துகிறார் மோடி... சென்னையில் திருநாவுக்கரசர் போராட்டம்.. கைது
மத்திய அரசைக் கண்டித்து சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக என்று கூறி, கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்தியில் ஆளும் மோடி அரசு அறிவித்தது. இதனையடுத்து, நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். தங்களிடம் உள்ள பழைய நோட்டை மாற்றுவதற்கும், வங்கியில் உள்ள தங்களுடைய பணத்தை எடுப்பதற்கும் மக்கள் படாதபாடு பட்டார்கள். மேலும், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வரிசையில் நிற்கும் போது சுமார் 75 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மேலும், நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம், போராட்டம், முற்றுகை, பேரணி என பல்வேறு வடிவங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழக காங்கிரஸ் கட்சியினர், சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர், மோடியின் அறிவிப்பால் இந்தியா முழுவதும் பந்த் போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினரையும், அவர்களது போராட்டங்களையும் பிரதமர் மோடி கொச்சைப்படுத்தி வருகிறார் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications