தமிழக பிரச்சினையை தீர்க்க எந்த கட்சிக்கும் திறமை கிடையாது: 56% மக்கள் அதிருப்தி
சென்னை: தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்த கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது என்று பாதிக்கும் லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் தலையானது எது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை, லஞ்சமும், ஊழலும் என்று 36.1 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அன்னா ஹசாரே, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோரின் லஞ்சத்திற்கு எதிரான போராட்ட தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளதே கணிசமானோர் இவ்வாறு கூற காரணம் என தெரிகிறது.
அதேநேரம், பெரிய அளவில் வர்ணிக்கப்பட்ட மதுபானத்திற்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் நமத்துப்போயுள்ளது இக்கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது. மதுபானம் முக்கிய பிரச்சினை என்று, 14.2 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
மின் வினியோகம் முக்கிய பிரச்சினை என்று, 12.5 சதவீதம்பேர்தான் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா அரசு சற்று பெருமூச்சுவிட இந்த கருத்து உதவும்.
குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதுதான் முக்கிய பிரச்சினை என்று, 14.2 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அதேநேரம், எத்தனை பிரச்சினை இருந்தாலும், அதை எந்த கட்சி ஆட்சியும் தீர்க்கப்போவதில்லை என்று 56.4 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு இருக்கும் அதிகப்படியான அதிருப்தியை இந்த பதில் புடம் போட்டு விளக்குகிறது.












Click it and Unblock the Notifications