தென்மேற்கு பருவமழை முடிந்தது... தீபாவளிக்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை!
அக்டோபர் 30 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து விட்டதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவுக்கு வந்து விட்டதாகவும், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 30ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு பருவமழை இயல்பாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டு தோறும், ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவமழை பெய்யும். அக்டோபர் இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழை காலமாகும்.
இந்த ஆண்டு,தென் மேற்கு பருவமழை, வழக்க மான தேதியை விட, ஏழு நாட்கள் தாமதமாக, ஜூன் 8ம் தேதி கேரளாவில் தொடங்கியது. செப்டம்பர் 28ம் தேதிக்குப் பின்னர் மழை பெய்யாமல் வெறும் காற்று மட்டும் தென் மேற்கில் இருந்து வீசியது.
ஏமாற்றிய தென்மேற்கு பருவமழை
இந்த ஆண்டு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில், 50 சதவீதம் கூட தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இது, தமிழகத்திற்கு ஏமாற்றமே.
தென்மேற்கு பருவமழையால் தென்மாவட்டங்களில் அணைகள் நிரம்பவில்லை. எனினும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதால் அணைகளில் நீர்மட்டமும் சரிந்து விட்டது.
திசை மாறிய புயல்
வங்க கடலில் சில தினங்களுக்கு முன் உருவான கியான்ட் புயல் மையம் கொண்டிருந்த போதே, தென்மேற்கிலிருந்து வீசும் காற்று நின்று விட்டது. இந்த நிலையில்
அக்டோபர் 25 முதல் வட கிழக்கு திசையிலிருந்து காற்று வீசவே ஒடிசாவை நோக்கி சென்ற புயல், யு டர்ன் அடித்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆந்திரா, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும்
இதன்காரணமாக ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங் களில், இன்று முதல் கனமழை பெய்யலாம்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் மூலம் தென் மேற்கு பருவமழை சீசன் முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் அக்டோபர் 30 முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இயல்பான மழை அளவு
கடந்த ஆண்டு அக்டோபர் 28ம் தேதி, வட கிழக்கு பருவமழை துவங்கியது. இந்த மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. தென் மாவட்டங்களிலும் நெல்லை, தூத்துக்குடியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அக்டோபர் 30 வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகநிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை இயல்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.