அரசு வீட்டைக் காலி செய்தார்.. போயஸ் கார்டன் அருகே புது வீட்டில் குடி புகுந்தார் ஓ.பி.எஸ்
கிரீன்வேஸ் சாலையில் வசித்து வந்த அரசு வீட்டை காலி செய்து செய்து விட்டு வீனஸ் காலனியில் உள்ள புது வீட்டில் பால் காய்ச்சி ஓ.பன்னீர் செல்வம் குடியேறியுள்ளார்.
சென்னை: நிதியமைச்சராக இருந்தபோதும், முதல்வராக 3 முறை இருந்த போதும் தான் வசித்து வந்த ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை இல்லத்தை இன்று காலி செய்தார் ஓ.பன்னீர் செல்வம். வீனஸ் காலனியில் புது வீட்டில் பால் காய்ச்சி குடியேறியுள்ளார்.
தற்போது அமைச்சர், முதல்வர் பதவிகளை இழந்து சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், அரசு சார்பில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தை காலி செய்யும்படி, பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கியிருந்தது.
வீட்டை காலி செய்ய ஆறு மாத கால அவகாசம் உள்ளது. ஆனால் ஆட்சி சசி குரூப் வசம் உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வந்தனர். இதையடுத்து வேறு வீடு தேடி வந்தார் ஓ.பி.எஸ். ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் பகுதியிலேயே முதலில் அவர் வீடு பார்த்து வந்தார். அங்கு எதுவும் செட் ஆகவில்லை.
இந்நிலையில், அருகாமையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் வீனஸ் காலனி பகுதியில் (இது போயஸ் கார்டன் பகுதிக்கு அப்படியே பின்னால் உள்ளது) இயக்குநர் மணிரத்னம் வீடு அருகில் ஒரு வீட்டைப் பார்த்து அவரும், அவரது குடும்பத்தினரும் இறுதி செய்தனர்.
இன்று தென்பெண்ணை இல்லத்தை காலி செய்து விட்டு ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் புது வீட்டில் பால் காய்ச்சி குடியேறினார். இது தொண்டர்கள் வந்து செல்ல பெரிய வீடு என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசு வழங்கிய கிரின்வேஸ் சாலை இல்லத்தைப் போல புது வீடும் காய்கறி தோட்டம் போடவும், பசு, காளைகளை வளர்க்க தோதாக பெரிய வீடாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புது வீடு குடிபோயுள்ள யோகம், ஓ.பி.எஸ்ஸுக்கு சீக்கிரமே நல்லது நடக்க வழி வகுக்கும் என்று அவரது தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.