தென்காசியில் 5 வது முறையாக களமிறங்கும் டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: தென்காசி தொகுதியில் 5 முறையாக களமிறங்கும் டாக்டர் கிருஷ்ணசாமி லோக்சபா தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தி.மு.க தலைமையில் அமைந்துள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு, தென்காசி லோக்சபா தொகுதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக முற்போக்கு கூட்டணி தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் தேர்வு குறித்து முடிவு செய்ய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி தலைமையில் கட்சியின் மாநில அரசியல் உயர்நிலைக்குழு கூட்டம், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

டாக்டர் கிருஷ்ணசாமி தேர்வு
இந்த கூட்டத்தில் தென்காசி தொகுதியின் வேட்பாளராக 4 முறை போட்டியிட்டு சொற்ப வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்த கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமியை நிறுத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தென்காசி தொகுதி வளம் பெருக , தொழில் முன்னேற்றம் காண , தனி மனித வாழ்கை முன்னேற்றம் காண, தென்காசி தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவான அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து அமைக்க தீவிரமாக முயற்சி மேற்கொள்ளவும் செய்யப்பட்டது.

திமுகவிற்கு நன்றி
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் பிரச்சாரம்
தென்காசி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இதற்காக எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய தேவை இல்லை. அதற்கு கால அவகாசம் உள்ளது. விரைவில் தென்காசி தொகுதியில் பிரசாரம் செய்வேன். தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன் என்றார்.

கிருஷ்ணசாமி பயோடேட்டா
டாக்டர் கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள மசக்கவுண்டன் புதூரை அடுத்த குடிமங்கலம் கிராமத்தில் 1952ல் பிறந்தார். தந்தை கருப்புசாமி குடும்பனார், தாயார் தாமரை அம்மாள்.

மதுரையில் படிப்பு
இந்து தேவேந்திரகுலத்தான் இனத்தைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டமும், கோவை மருத்துவக்கல்லூரியில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

டாக்டர்கள் குடும்பம்
டாக்டர் கிருஷ்ணசாமியின் மனைவி சந்திரிகா பி.எஸ்.சி., எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். மகள் சங்கீதா ஓம்நாத் எம்.எஸ்.,
(மகப்பேறு மருத்துவர்), மகன் க.கி..ஷ்யாம் எம்.பி.பி.எஸ். 5- ஆம் ஆண்டு படித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications