தமிழ் அழிவதை பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை சிறையில் தள்ள வேண்டும்: ராமதாஸ்
திருவண்ணாமலை: தமிழ் மொழி அழிவதை பார்த்து கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்களையும், அறிஞர்களையும் சிறையில் போட வேண்டும் என்பதே என் ஆசை என்று ராமதாஸ் கூறினார்.
திருவண்ணாமலை தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 15 ஆம் ஆண்டு தமிழகப் பெருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்று சொல்லும் அளவுக்கு தற்போது நிலை மாறி உள்ளது.
மொழி, இனம், மண் இவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருப்பது தான் இதற்கெல்லாம் காரணம்.
1956ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது, 'மெட்ராஸ் பிரசிடென்சி'யில் இருந்து தமிழ்நாடு என மொழிவாரி மாநிலம் உதயமானது. அப்போது பிரிந்து போன, 10 வட்டங்களில் எட்டு வட்டங்கள் ஆந்திரா மாநிலத்துடனும், இரண்டு வட்டங்கள் கேரளாவுடனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வட்டங்கள் இருந்திருந்தால் முல்லைப் பெரியார் அணை உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருந்திருக்கும்.
தமிழ் மொழியில் ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளை கலப்பு செய்து தமிழ் மொழியை அழிக்க சிலர் செயல்படுகின்றனர். தமிழ் மொழி மீது பற்று வைத்திருக்க வேண்டிய இளைஞர்கள், மது மீதும், திரைப்படங்கள் மீதும்தான் பற்று வைத்திருக்கின்றனர்.
என் கட்சியை சேர்ந்த ஒருவரிடம் தூய தமிழில் பேசுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு வேற்றுமொழி வார்த்தைக்கும் 10 ரூபாய் அபராதம் விதித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். சில நாட்களுக்கு பிறகு என்னை பார்க்க வந்தவர், உங்கள் சொல்படி அபராதம் விதித்துக் கொண்டால் எனக்கு தினமும் குறைந்தது 500 ரூபாய் செலவாகிறது என்றார். தினம் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் எவ்வளவு வேற்றுமொழி வார்த்தைகள் கலப்பு இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
கொங்கு தமிழ் அறக்கட்டளை மூலமாக தமிழ் ஆட்சி மொழியாக அமைப்பதற்கான வரைவு அறிக்கையை தயார் செய்து, அதை தமிழகத்தில் இருக்கும் 143 தமிழ் அறிஞர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்கள் சொன்ன மாற்றங்களை செய்து, தமிழக அரசுக்கும், தமிழக அரசில் இருக்கும் மூத்த அதிகார்களுக்கும் அனுப்பி வைத்தேன். அந்த அறிக்கை எங்கு தூக்கி போடப்பட்டது என்று தெரியவில்லை.
எனக்கு ஒரு ஆசை உள்ளது. தமிழ் மொழி அழிந்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்களையும், தமிழ் அறிஞர்களையும் பிடித்து சிறையில் போடவேண்டும். அப்போதாவது தமிழ் மொழியை காப்பாற்ற பாடுபடுவார்களா? என்று பார்க்கலாம். இப்போது, எங்கும் தமிழ் இல்லை, எதிலும் தமிழ் இல்லை என்று இருக்கும் நிலையை மாற்ற வேண்டும். கலப்பு இல்லாத தமிழ் மொழியை பேச பழக வேண்டும். அப்போதுதான், தமிழ்மொழி வளரும். இவ்வாறு அவர் பேசினார்.