12 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது வி.சி.- ரவிக்குமார் போட்டியில்லை!
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான 12 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலரான எழுத்தாளர் ரவிக்குமார் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கடந்த 18-ந் தேதி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டார்.
அதில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் நேற்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து கல்வியாளர் வசந்திதேவியும் காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று எஞ்சிய 12 தொகுதிகளுக்கான இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்- பாலசிங்கம்
வானூர்- தமிழ்ச்செல்வன்
அரக்கோணம்- இளஞ்சேகுவேரா
திருவிடைமருதூர்- விவேகானந்தன்
பொன்னேரி- செந்தில்
ஸ்ரீபெரும்புதூர்- வீரக்குமார்
கள்ளக்குறிச்சி- ராமமூர்த்தி
அரூர்- கோவேந்தன்
சோழவந்தான் - பாண்டியம்மாள்
பரமக்குடி- இருளன்
ஆத்தூர்- ஆதித்யன்
மானாமதுரை- பாலன்
ரவிக்குமார் போட்டியில்லை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும் எழுத்தாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. 2006-2011 தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
இம்முறை காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். மேலும் காட்டுமன்னார்கோவில் தொகுதியைத் தவிர வேறு தொகுதியில் போட்டியிடவும் ரவிக்குமார் விரும்பவில்லை என்கின்றன விடுதலை சிறுத்தைகள் வட்டாரங்கள்.