Agri: படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அத்திப்பழம் சாகுபடியில் அசத்தி வருவதோடு அதன்மூலம் கை நிறைய வருமானமும் ஈட்டி வருகிறார்.
எம்.பி.ஏ. படித்துள்ள மனோஜ் என்ற அந்த இளைஞர் சென்னையில் முன்னணி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் அங்கிருந்து விலகி இப்போது விவசாயத்தை கையில் எடுத்துள்ளார்.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அத்திப்பழம் சாகுபடி செய்து அதன் மூலம் நிறைவான வருமானமும், நிம்மதியும் அடைந்து வருவதாக கூறுகிறார் இளம் விவசாயி மனோஜ்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;

31 வயது இளைஞர்
'' என் பெயர் மனோஜ், நான் எம்.பி.ஏ. படித்திருக்கிறேன். சென்னையில் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். பிறகு திருப்பூரில் எனது உறவினர் நிறுவனத்தில் பணியாற்றினேன். இங்கெல்லாம் கிடைக்காத ஒரு மன நிம்மதி விவசாயத்தில் கிடைக்கிறது. எனக்கு தற்போது 31 வயதாகிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை நான் சுற்றி வந்துவிட்டேன். அப்படி சென்ற இடத்தில் மஹாராஷ்டிராவில் அத்திப்பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.''

அத்திப்பழம் சாகுபடி
''சரி நாமும் அத்திப்பழம் சாகுபடி செய்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. இதையடுத்து பெருமாநல்லூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சின்னியம்பாளையம் கிராமத்தில் எங்கள் நிலத்திலேயே அத்திப்பழம் சாகுபடி செய்ய திட்டமிட்டேன். இதற்காக முதற்கட்டமாக 400 அத்திப்பழக் கன்றுகளை மஹாராஷ்டிரா மாநிலத்தில் வாங்கினேன். ஒரு கன்றின் விலை ரூ.160. அதனை வாகனம் மூலம் திருப்பூர் கொண்டு வந்ததற்கான செலவு தனி.''

6 மாதங்களில் காப்பு
''அத்திப்பழக் கன்று நடவு செய்து சுமார் 6 மாதங்களில் காப்பு பிடித்தது. அதிலிருந்து 8 மாதங்கள் வரை அத்திப்பழம் அறுவடைக்கு வரும். நான் இதில் இறங்கி ஒரு வருடம் தான் ஆகிறது. இதுவரை ஒரு டன் வரை மகசூல் பெற்றிருக்கிறேன். பண்ணையில் இருந்தே நேரடியாக விற்பனை செய்கிறேன். ரசாயனங்கள் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை உரம் மூலம் மட்டுமே இதை பராமரித்து வருகிறேன். அதனால் அத்திப்பழம் கிலோ ஒன்று ரூ.300-க்கு விற்பனை செய்கிறேன். இதனை தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள்.''

சொட்டுநீர் பாசனம்
"5 டிகிரியில் இருந்து 45 டிகிரி வரையிலான தட்பவெப்ப நிலை நிலவும் பகுதிகளில் தாராளமாக அத்திப்பழம் சாகுபடி செய்யலாம். சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் விடுகிறேன். முதற்கட்டமாக நான் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தநிலையில், அதற்கு நல்ல வரவேற்பும், மகசூலும் கிடைப்பதால் மேற்கொண்டு நண்பர்கள் நிலங்களிலும் இதனை பயிரிட திட்டமிட்டு வருகிறோம். முழு ஈடுபாட்டோடு இதில் இறங்கினால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி. இதை எனது அனுபவத்தில் கூறுகிறேன்.'' என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தார் மனோஜ்.












Click it and Unblock the Notifications