கறவை மாடு-கோழி: இது ராமதாஸின் 'பட்ஜெட்'
சென்னை: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு கறவை மாடு, 5 நாட்டுக் கோழிகள் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாமக சார்பில் வேளாண்மை துறை வரைவு பட்ஜெட்டை ராமதாஸ் இன்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக அரசு பட்ஜெட் தயாரிப்பதற்கு முன் வணிக பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளது. அதை வரவேற்கிறோம். ஆனால், 60 சதவீத மக்கள் சார்ந்திருக்கின்ற விவசாயத்தை பற்றி அக்கறை கொள்ளவில்லை. விவசாயிகளின் தேவைகளை தெரிந்து கொள்வதற்கும் முயற்சி எடுக்கவில்லை.
வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 2வது ஆண்டாக இன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதில், 128 தலைப்புகளில் எங்கள் ஆலோசனைகளை தெரிவித்துள்ளோம்.
வேளாண்மை மற்றும் கால்நடை அபிவிருத்திக்கு ரூ.5,760 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு கறவை மாடு, 5 நாட்டுக் கோழிகள் வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக உயர்த்த வேண்டும். அரசு மானியமாக ரூ.13 வழங்க வேண்டும்.
பொதுமக்கள் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு பாலுடன், கீரை வழங்கும் புதிய திட்டத்தை தெரிவித்துள்ளோம். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க மானவாரி பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விளை பொருட்களை விற்பதற்கும், பதப்படுத்துவதற்கும் சர்வதேச தரத்துடன் மொத்த வியாபார சந்தைகளை உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் 2 நியமன உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
சிறப்பு வேளாண்மை பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்கவும், வேளாண்மை கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications