கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்?
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாத ஒன்றாக இருந்தது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை, பணவீக்க அச்சம் மற்றும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றிலிருந்து தங்களின் பணத்தைப் பாதுகாக்க நினைத்த முதலீட்டாளர்கள் அனைவரும், பாதுகாப்பான புகலிடமாக விளங்கும் தங்கம் மற்றும் வெள்ளி மீது கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்தனர்.
வாரந்தோறும் தங்கம் புதிய உச்சங்களைத் தொட்டதும், வெள்ளி பல எப்போதும் காணாத மாபெரும் உயர்வை கண்டதும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த நிலைமை தலைகீழாக மாறி, தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப் (ETF) நிதிகளில் முதலீடு செய்த நடுத்தர மக்கள் தற்போது பெரும் கவலையிலும், கண்ணீரிலும் ஆழ்ந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக புரட்டிப்போடும் ஈரான் போர்
ஒரு காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டும்தான் முதலீட்டு உலகின் எதிர்காலம் என்ற ஒரு பிம்பம் இருந்தது. ஆனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் ஈரான் போர் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை தற்போது ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு வருகின்றன.
பல்லாண்டுகளாகப் பெரிய அளவில் எவ்வித அதிரடியுமின்றி இருந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது போர் பதற்றங்களால் எகிறத் தொடங்கியுள்ளது. இது தவிர, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் உலகச் சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு கணிசமாக வலுவடைந்து வருகிறது.
பொதுவாக டாலர் மதிப்பு உயரும்போது சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளைத் தங்கத்திலிருந்து டாலர் நோக்கி மாற்றுவது வழக்கம். இதேபோல் தங்கம் விலை உச்சத்தில் இருந்து சரியும் காரணக்கால் முதலீட்டாளர்கள் கிடைத்த லாபம் போதும் தங்களின் முதலீட்டை விற்று லாபத்தைப் புக் செய்ய (Profit Booking) முடிவு செய்ததும் தான் இந்த திடீர் விலைச் சரிவுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
எம்சிஎக்ஸ் (MCX) சந்தை
இந்திய கமாடிட்டி சந்தையான எம்சிஎக்ஸ் (MCX) நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. தங்கம் தனது முக்கிய உளவியல் எல்லையான 1,50,000 ரூபாய் என்ற அளவிற்குக் கீழ் சரிந்து வர்த்தகமாகி வருவது சந்தையில் ஒரு எச்சரிக்கை மணியாக விளங்குகிறது.
சந்தை வல்லுநர்களின் கணிப்பின்படி, தங்கத்தின் விலை 1,46,000 ரூபாய் என்ற ஆதரவு நிலைக்குக் கீழ் சரிந்தால், விற்பனை அழுத்தம் மேலும் அதிகரித்து விலை 1,45,000 ரூபாய் முதல் 1,43,000 ரூபாய் என்ற வரம்பிற்குள் செல்லக்கூடும்.
இதேபோல், வெள்ளியின் விலை 2,30,000 ரூபாய் என்ற முக்கிய ஆதரவு நிலைக்குக் கீழ் உடைந்தால், அது அடுத்தகட்டமாக 2,28,000 ரூபாய் முதல் 2,25,000 ரூபாய் வரையிலான பகுதிக்குத் வேகமாக தள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது முதலீட்டாளர்கள் செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயம்!
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவைக் கண்டு சிறு முதலீட்டாளர்கள் யாரும் பதற்றமடைந்து தங்களின் முதலீடுகளை அவசர அவசரமாக விற்கக் கூடாது (Avoid Panic Selling). ஒரு மாபெரும் வரலாற்று ஏற்றத்திற்குப் பிறகு சந்தையில் இதுபோன்ற குறுகிய காலச் திருத்தங்கள் (Short-term corrections) ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்றாகும். எனவே, தினசரி விலை மாற்றங்களைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இரண்டாவதாக, முதலீட்டாளர்கள் தங்களின் ஒட்டுமொத்த முதலீட்டு பங்கீட்டை (Asset Allocation) மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த கால லாபத்தால் உங்களின் மொத்த முதலீட்டில் தங்கம், வெள்ளியின் பங்கு மிக அதிகமாகியிருந்தால், உங்களின் நிதி இலக்குகளுக்கு ஏற்ப அதனைச் சமநிலைப்படுத்திக் கொள்ளலாம்.
மூன்றாவதாக, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்குச் சந்தையின் இந்த வீழ்ச்சி ஒரு அருமையான வாய்ப்பாகும். மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், விலை குறையும் போதெல்லாம் சிறுகச் சிறுக முதலீடு செய்யும் முறையான உத்தியைக் (Systematic Buying) கையாள்வதன் மூலம் சந்தையின் ஏற்ற இறக்க பாதிப்புகளைக் குறைத்து நீண்ட காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.
தற்போதைய சர்வதேசப் போர்ச் சூழல் மற்றும் டாலர் உயர்வால் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிகச் சரிவு தற்காலிகமானதே என்பதால், தினசரி விலை மாற்றங்களை பயன்படுத்தி நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.












Click it and Unblock the Notifications