கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு ஊர்ல ஒரு ராஜா.
அவரிட்ட எத்தனையோ அதிகாரிக வேலை பாத்தாங்க. அதுல குறிப்பட்ட ஒரு அதிகாரி பேர்ல மட்டுந்தான் ஆவலாதி (புகார்) வந்தது ராஜாவுக்கு.
அந்த அதிகாரி ராஜாகிட்டதான் முதல்ல வேலை பார்த்தார். ராஜாவுக்கு ரொம்ப நெருங்கின சொந்தக்காரர். அதனால நம்பிக்கையானவராஇருப்பார்ன்னுதான் ராஜா தனக்குப் பக்கத்துலயே இருக்கச் சொல்லி வேலை கொடுத்து வச்சிருந்தார்.
தர்பார் கூடும் நேரம் தவிர மத்த நேரங்கள்ள ராஜாவைப் பார்க்க வந்தாலும், இப்ப ராஜாவைப் பார்க்க முடியாதுன்னு சொல்லிடுவார்.
ரொம்ப முக்கியமான சமாச்சாரம் ன்னு கேட்டா இப்பத்தான்,தூக்கம் வருது; யார் வந்தாலும் எழுப்பாதெ ன்னு சொல்லீட்டுப் போயிருக்கார் ன்னுசொல்லுவார்.
ராஜாவுக்கு இன்னைக்கு மனசே சரியில்ல; யாரைப் பார்த்தாலும் சிடுசிடுன்னு எரிஞ்சி விழுறார் ன்னு சொல்லுவார்.
வந்தவங்க, நாம வந்த நேரம் சரியில்லன்னு போயிருவாங்க.
ஒரு பிரமுகர் வந்து, ரொம்ப அவசரம் ராஜாவைப் பாத்தே ஆகணும் அப்பிடி ஒரு முக்கிய சமாச்சாரம் ன்னு சொன்னார்.
அப்பிடி என்ன அவசரம். தலை போகற அவசரம்? இப்பத்தாம் ராஜா அந்தப்புரத்துக்குப் போயிருக்கார். ராணியோட நெருக்கமா இருக்கிறப்ப ஒம்மஅவசரத்துக்கு கதவைத் தட்ட முடியுமாவே ன்னு கேட்டதும் மூச்சுக் காட்டாம நகர்ந்திட்டார்.
இப்பிடி வர்றவங்களுக்கு ஏதாவது ஒரு தாட்டோட்டைச் (தட்டிக் கழிக்கிற சாக்கு) சொல்லிச் சொல்லி அனுபிச்சிக்கிட்டேயிருந்தார்.
மனுசர்கள்ள கள்ள நரிகளும் உண்டில்லையா; இந்த மாதிரி அவங்களும் எத்தன அதிகாரிகளப் பாத்திருப்பாங்க.
அந்த அதிகாரி பின்பக்கமா கையக் கட்டிக்கிட்டு விரல்கள விரல்கள ஆட்டிகிட்டே லாந்திக்கிட்டே இருப்பார். அப்பிடி பின்பக்கம் ஆட்டிக்கிட்டேஇருக்கிற உள்ளங்கையில ஒரு களஞ்சி தங்க நாணயத்த வச்சி ஒரு அமுக்கு அமுக்கிட்டாப் போதும். சத்தங் காட்டாம ராஜா இருக்கிற இடத்துக்குக் கூட்டீட்டுப்போயிருவார்!
இப்படியா அந்த அதிகாரிக்கு தினோம் கை நிறைய்ய தரம் வாரியா தங்க நாணயம், வெள்ளி நாணயம், செப்பு நாணயம் இப்பிடி பை பையா சேந்து போச்சு.
ஒரு அதிகாரிக்கு இப்படி மேல் வருமானம் வந்தா மத்த அதிகாரிங்க சும்மா இருப்பாங்கள. ராஜாகிட்டப் போயி சொல்ற விதமா சொல்லீட்டாங்க.
சொந்தக்காரன்னு வேல போட்டுத் தந்தா இந்தக் கிருத்தரியமா பண்ணுதான்னு சொல்லி வேற இடத்துக்கு மாத்துனார் அந்த அதிகாரிய.
சூடுகண்ட பூனை சும்மா இருக்குமா. அங்கயும் போயி இதே கிரித்தரியத்தப் பண்ணுனது, ராஜாவுக்குத் தெரிஞ்சி போச்சி. விசாரிக்க கூப்டு அனுப்புனார். அதிகாரிவந்ததும் ராஜா கால்ல தொபுக்கட்டீர்ன்னு விழுந்துட்டார். எந்திரிக்கவே இல்ல.
எந்தியும்
தப்பு செஞ்சிட்டேம் மகராசா; மன்னிச்சேம்ன்னு சொன்னாத்தாம் எந்திருப்பேம் ன்னார்.
சிரிப்பு வந்துட்டது ராஜாவுக்கு.சரி; மன்னிச்சசேம். எந்திரி ன்னார்.
எந்திரிச்சி, தலைக்கு மேல ரெண்டு கையவும் கும்பட்ட மானைக்கே வச்சிக்கிட்டே நின்னார்,
ராஜாவுக்குப் பிரியப்பட்ட ஒரு அதிகாரியே இப்பிடி தப்பு வழியில வருமானம் பாத்தா அவனுக்கு என்ன தண்டனை தரலாம் நீயே சொல்லு.
மாறுகை, மாறுகால் வாங்கிரலாம் மகராசா.
அப்பிடி செஞ்சிரலாமான்னு ராஜா கேட்டார்.
குடும்பச் செலவு கட்டுப்படி ஆகல. பிள்ள குட்டி அதிகமாயிட்டு. நாயி தப்பு செஞ்சிட்டேம், இப்பொ ஒரு கலியாணம் பண்ணிக்கிட்டேன். ஒரு தொடுப்பு வேற.இனி புத்தியாப் பிழைப்போம்ன்னார்.
தொடுப்பு வேறயா! ராஜவுக்கு சிரிப்பாணி அள்ளுது. கட்டுப்படி ஆகலேன்னா எங்கிட்ட வந்து சொல்லணும். கேக்கணும் தெரியிதா?.
புத்தி மகராஜா.
அந்த அதிகாரியோட சம்பளத்த ரெண்டு பங்கு ஆக்கி, வேற ஒரு இடத்துக்கு மாத்தி உத்தரவு போட்டார்.
அப்பவும் அந்த அதிகாரி திருந்தல. அதே பாதையிலதாம் போனார்.
என்ன செய்யிறதுன்னு ராஜாவுக்குத் தெரியல.
மந்திரிய வரவழைச்சி ஆலோசனை பண்ணார்.
வஞ்சமே வாங்க முடியாத வேலை ஏதாவது இருக்கான்னு கேட்டார் மந்திரிக்கிட்ட.
அப்பிடி ஒரு வேலைய இனிமேத்தாம் கண்டுபிடிக்கனும்ன்னார் மந்திரி.
உடனே கண்டுபிடியும்ன்னார்.
சமுத்திரத்தில் அலைய எண்ற வேல போட்டுத் தரலாம் மகாராஜான்னார் மந்திரி. பொழுது புறப்படுறதுக்கு முன்னால எத்தன அலை வந்தது, பொழுதுபுறப்பட்ட பிறகு எத்தன அலை வந்தது. மத்தியானம் எத்தன அலை வருது, சாயந்திரம் எத்தன, ராத்திரி எத்தன வருதுன்னு கணக்கெடுத்து அன்னாடம்எண்ணிக்கையைக் கூட்டி மொத்தம் இத்தன ன்னு சொல்லனும். இதாம் வேல ன்னார் மந்திரி.












Click it and Unblock the Notifications