2008ன் முக்கிய சம்பவங்கள்!

ஓகனேக்கல் விவகாரத்தை அரசியலாக்கியது கர்நாடகா. இதன் விளைவு, பெங்களூரில் பெரும் வன்முறை வெடித்தது. தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன.
கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மார்ச் 16ம் தேதி ஓகனேக்கலுக்கு திடீரென வந்த பாஜக தலைவர் எடியூரப்பா, அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து ஓகனேக்கல் விவகாரத்தை கன்னட அமைப்புகள் கையில் எடுத்துக் கொண்டன.
ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்ற கோஷத்துடன் நடத்தப்பட்ட வன்முறையால் பெங்களூர் பெரும் பதட்டத்தில் மூழ்கியது.
31ம் தேதியன்று பெங்களூரில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. இதையடுத்து தமிழ்த் திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டது. தமிழ் டிவி சேனல்களும் கேபிள் டிவியில் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
கர்நாடகத்தில கன்னட அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்திற்குப் பதிலடியாக தமிழகத்திலும் கன்னடர்கலுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கர்நாடக அரசுப் பேருந்துகள் தாக்கி தீவைக்கப்பட்டன. கர்நாடக அரசுப் போக்குவரத்து கழக அலுவலகங்களும் தாக்கப்பட்டன.
தியேட்டர்களைத் தாக்கிய கன்னட அமைப்பினரைக் கண்டித்து சென்னையில் திரையுலகினர் ஏப்ரல் 4ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதற்குப் போட்டியாக அதே நாளில், பெங்களூரில் கன்னட கலைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.
கொந்தளிப்பு நிலவி வந்த நிலையில் திடீரென திட்டம் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் அறிவிக்கவே வன்முறைகளும் அப்போதைக்கு நின்றன.












Click it and Unblock the Notifications