புத்தக விழா: மாணவர்கள் போராட்டம்
சென்னை: சென்னையில் நடந்து வரும் புத்தக விழாவால் தங்களது படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி மாணவ, மாணவியரும் அவர்களது பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் சென்னை புத்தக விழா நடந்து வருகிறது. வழக்கமாக அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் புத்தக விழா நடைபெறும். இம்முறை செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் புத்தக விழாவில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காரணம், அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் முற்றுகைப் போராட்டம்தான்.
அடிக்கடி இந்தப் பள்ளி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் தங்களது படிப்பு பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
புத்தக விழாவின் நுழைவாயில் நடந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
பெற்றோர் கூறுகையில், இங்கு அடிக்கடி கல்யாண நிகழ்ச்சிகள், கல்யாண வரவேற்பு, கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் என நடந்து கொண்டே இருக்கிறது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நிகழ்ச்சிகளுக்கு இந்த வளாகத்தை வாடகைக்கு விடுகின்றனர்.
இதனால் மாணவர்களின் படிப்புக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. பள்ளி நிர்வாகம் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கருதி இதுபோல நடந்து வருகிறது.
விடுமுறைக் காலத்தில் நடத்தினால் கூட பரவாயில்லை. பள்ளி நேரத்தில், அதிலும் பரீட்சைக் காலத்தில் இதுபோல நடப்பதால் பத்தாவது மற்றும் பிளஸ்டூ மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.
இந்த சர்ச்சை குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் பால் விக்டர் கூறுகையில், பணத்திற்காக நாங்கள் மைதானத்தை வாடகைக்கு விடுவதில்லை. பள்ளி நிர்வாகத்தை திறம்பட நடத்த போதுமான நிதி எங்களிடம் உள்ளது.
இதுவரை எந்தப் புகாரும், பிரச்சினையும் எழுந்ததில்லை. இருப்பினும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்தால் அதுகுறித்து கவனிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications