ஜெவுக்கு பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பு நன்றி
பாரிஸ்: தனி ஈழம் அமைப்பேன் என்ற அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு நன்றி தெரிவித்து பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில்,
அதிமுக பொதுச் செயலாளர் மாண்புமிகு செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு!
கொடிய சிங்கள இனவெறிஅரசின் கொலைக்கரங்களில் இருந்து எங்கள் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள் என்று உலகத்தின் வீதிகளில் நாளும்பொழுதும் கண்ணீரோடு கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திவரும் எங்களுக்கு அண்மையில் தாங்கள் ஆற்றிய உரை புதுத்தெம்பையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
தாயகத்தில் இருந்து அன்றாடம் கிடைக்கின்ற செய்திகளால் கவலை மிகுந்தும், உலகத்தின் பராமுகத்தால் ஏமாற்றத்துடனும் இருந்த ஈழத்தமிழினத்தின் புலம்பெயர்ந்த புதிய தலைமுறையினராகிய நாங்கள் தங்களின் நேர்மையானதும், உரிமைமிகு சிந்தனைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம்.
தமிழீழ மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை சரியாக இனங்கண்டு கடந்த காலங்களில் அதிமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் உரியகாலங்களில் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பதையும் நாம் அறிவோம்.
குறிப்பாக ஈழத்தழிழர் நெஞ்சங்களில் அழியாத இடம்பிடித்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழர்களின் பொற்காலம் என எமது பெரியோர்கள் கூறுவார்கள். தாங்களும் அத்தகைய பொற்காலத்தை எமக்குத் உருவாக்கித் தருவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
எதிர்வரும் தேர்தலில் தங்கள் தலைமையிலான கூட்டணி பெருவெற்றி பெற வாழ்த்துகின்றோம். அதிமுக ஆதரவுடன் இந்திய மத்திய அரசு அமையும் நாளையும், எங்கள் அன்னை பூமியில், எங்கள் உரிமை பூமியில, தனிஈழம் காணும் நாளையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.