காந்திக்கு மரியாதை செலுத்துவதை கட்டாயமாக்க சட்டம் கொண்டு வர முடியாது - சுப்ரீம் கோர்ட்
மகாத்மா காந்தி குறித்து உ.பி. முதல்வர் மாயாவதி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து வக்கீல்கள் ரவிகாந்த் மற்றும் சுகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில், ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதில், காந்தியடிகள் இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக, ஒவ்வொரு இந்திய குடிமகனும், அவருக்கு மரியாதை செலுத்த வேண்டியது அவசியமாகும். எனவே காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துவதை கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர் நாட்டு மக்கள் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துவதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட முடியாது.
காந்தியடிகள் குறித்து மனுதாரர்கள் கூறுவதை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம். அதேசமயம், இதை முறைப்படுத்தியும், கட்டாயப்படுத்தியும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவோ அல்லது சட்டம் கொண்டு வரவோ உத்தரவிட முடியாது.
மேலும், இதுபோன்ற பொது நலன் மனுக்களையும் அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.