செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு 17 ஏக்கர் நிலம்
சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வளாகம் அமைக்க சென்னை பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழை 2004ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி செம்மொழியாக மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, தமிழில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் மூலம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008ம் ஆண்டு மே 19ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.
சென்னை காமராஜர் சாலையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் இந்த நிறுவனம் இப்போது இயங்கி வருகிறது.
முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் தமிழறிஞர்கள் அடங்கிய ஐம்பெருங்குழு, கவிஞர்கள் அடங்கிய எண்பேராயம் ஆகிய குழுக்களின் வழிகாட்டுதல்கள்படி இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தமிழில் செவ்வியல் காலம் எனப்படும் கி.பி. 6ம் நூற்றாண்டு வரையிலான அனைத்து ஓலைச் சுவடிகளையும் இந்த நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு ஆய்வுகளையும் தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மூலம் மேற்கொண்டுள்ளது.
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகியவை தொடர்பாக 41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புகளை வெளியிடும் பணிகளை இந்த ஆய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.
பாலாறு இல்ல வளாகத்தில் உள்ள இந்த அலுவலகம் நிர்வாகப் பணிகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. ஆய்வகம் மற்றும் நூலகப் பிரிவுகள் அமைக்க இந்த வளாகம் போதுமானதாக இல்லை.
எனவே இந்த நிறுவனத்துக்கு வளாகம் அமைக்க மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இங்கு ஆய்வு மையம் மற்றும் நூலக வளாக கட்டுமானப் பணிகளுக்கு ரூ.9 கோடியும், பிற செலவுகளுக்காக ரூ.3 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் ஒரு திட்டமாக இருந்த செம்மொழித் தமிழாய்வுத் திட்டம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக கடந்த ஜனவரியில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் பொறுப்பு அலுவலர் க. இராமசாமி செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications