பார்வையற்ற வாலிபரை திருமணம் செய்த புரட்சி பெண்!
கோபி: ஈரோடு அருகே பார்வையற்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார் ஒரு புரட்சி பெண்.
அந்த பெண்ணின் பெயர் ரத்தினாள் (25). ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், இண்டியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கன் என்பவரின் மகள். இவர் எம்.காம் பட்டதாரி.
ஈரோடு மாவட்டம், நம்பியூரை சேர்ந்தவர் கருப்பசாமி (33). பார்வையற்றவர். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இசையில் நல்ல ஆர்வம் கொண்ட அவர் பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் திருமணத்தில் இருவரும் முதன் முறையாக சந்தித்துள்ளனர்.
ஆரம்பத்தில் நட்புடன் பழகிய இவர்கள் இருவரும், பின்னர் தீவிரமாக காதலிக்கத் துவங்கினர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, ரத்தினாள் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் தனது காதலில் உறுதியுடன் நின்ற ரத்தினாள் கருப்பசாமியை அழைத்துச் சென்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டார்.
பின்பு பாதுகாப்பு கோரி கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.