ஜல்லிக்கட்டை தொழில் போல பாவிக்கக் கூடாது-தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. ஆனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் மூலம் இந்த பாரம்பரிய அடையாளத்துக்கு பேராபத்து வந்துள்ளது. ஜல்லிக்கட்டை தடம் தெரியாமல் அழித்து விட வேண்டும் என அவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஜல்லிக்கட்டை அனுமதித்துள்ளது. இன்னும் இறுதித்தீர்ப்பு வரவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஜல்லிக்கட்டு ஒரு தொழிலாக மாறி வருகிறது. இதை வைத்து பலர் பணம் பண்ணுகிறார்கள். இதை தமிழக அரசு அனுமதிப்பது கண்டித்தக்கது. இதை தொழிலாக பார்க்கக் கூடாது.
பொங்கல் பண்டிகை சமயத்தில் ஜல்லிக்கட்டை வைத்து நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். இதை எப்படி தமிழக அரசு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நடத்த அனுமதித்துள்ளது.
ஜல்லிக்கட்டை ஜனவரி- பிப்ரவரி என 2 மாதங்களுக்கு மட்டுமே நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும்,காப்புத் தொகையான ரூ. 2 லட்சம் என்பதை ரூ.20 லட்சமாக உயர்த்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் அடுத்த மாதத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
தமிழக அரசு தற்போது ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.