மழை தீவிரம் : குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு-மெயினருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை
குற்றாலம்: பலத்த மழை காரணமாக குற்றாலத்தில் நேற்று காலை பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
கார்த்திகை மாதம் துவங்கியது முதல் அதாவது கடந்த 14 நாட்களாக வடகிழக்கு பருவமழை மலையடிவார பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 10 நாட்களில் ஆறு நாட்கள் குளிக்கத் தடை விதிக்கும் அளவுக்கு மெயினருவியில் தண்ணீர் கொட்டியது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் தடையின்றி குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மழை காரணமாக இரவு சுமார் 9 மணி அளவில் மீண்டும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இரவில் மழையின் அளவு அதிகரித்ததால் அதிகாலை வேளையில் மெயினருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாதுகாப்பு வளைவையும் தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டியது. குற்றால நாதர் கோயில் பின்புறம் மற்றும் சன்னதி பஜார்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நேற்று கார்த்திகை மாதத்தின் இரண்டாவது திங்கள் கிழமை சோமவரம் என்பதால் அதிகாலை முதல் ஏராளமான சுமங்கலிப் பெண்கள் அருவியில் புனித நீராடி பூஜை நடத்துவதற்காக வந்திருந்தனர். அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் பெண்கள் குளிக்கும் பகுதியில் வழிந்தோடும் தண்ணீரில் குளித்தனர்.












Click it and Unblock the Notifications