கேரள பகவதியம்மன் கோவிலில் பொங்கல் விழா-5 லட்சம் பெண்கள் பங்கேற்பு
திருவனந்தபுரம்: கேரள பகவதியம்மன் கோவிலில் நேற்று பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. இதில் 5 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டனர்.
கேரள மாநிலம் திருவல்லா அருகே உள்ள சக்குலத்துகாவு பகவதியம்மன் கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு அஷ்டதிரவ்ய மகாகணபதி ஹோமத்துடன் சடங்குகள் தொடங்கின.
காலை 9.30 மணி அளவில் பொங்கலிடும் நிகழ்ச்சியை வி.எச்.பி. பொதுச் செயலாளர் கும்மனம் ராஜசேகரன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில் முக்கிய காரியதரிசி ராதா கிருஷ்ணன் நம்பூதரி ஸ்ரீ கோவில் அணையா விளக்கிலிருந்து தீபம் எடுத்து வந்து முதல் அடுப்பை பற்ற வைத்தார். இதன் பின்னர் கோவிலை சுற்றி 10 கிமீ சுற்றளவில் குவிந்திருந்த 5 லட்சத்தி்ற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பொங்கல் நெய்வேத்யம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிற்பகல் 12.30 மணியளவில் திவ்யாபிஷேகமும், மாலையில் கார்த்திகை ஸ்தூபியில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.