எங்கே நீ சென்று விட்டாய் ?
நான் பார்க்காத தருணத்தில்
பலமுறை நீ பார்த்தாய்….
இன்றோ
உனை எதிர்பார்த்து நிற்கின்றேன்
எங்கே நீ சென்றுவிட்டாய் ?
எதிர்பாரா தருணத்தில்
எத்தனையோ முத்தங்கள்
கேட்காமல் நீ கொடுத்தாய்….
இன்றோ
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
எங்கே நீ சென்றுவிட்டாய் ?
தோட்டத்து பூக்களெல்லாம்
உன் விரல் தொட
காத்திருக்க…
காற்றோடு கலந்து
எங்கே நீ சென்று விட்டாய் ?
மடியில் தலை சாய்த்த
மரகத மணித்துளிகள்…
தலையில் விரல் கோதிய
தங்க நிமிடங்கள்…
மார்பில் முகம் புதைத்த
முத்துத் தருணங்கள்
அத்தனையும்….
என் நினைவில்
வந்து வந்து போகுதடா !
நீ இல்லாத கணங்கள்
என் வாழ்வின் ரணங்கள்…
நனைந்த தலையணைகள்
என் கண்ணீர் கதை கூற…
பவுர்ணமி நிலவும்
பகலாய் காய…
எனைக் காண வருவாய் என
எதிர்பார்த்து ஏமாந்தேன்…
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே
பறந்து நீ போனதெங்கே ?
என் அன்புக் காதலா !
எனை விட்டு
எங்கே நீ சென்று விட்டாய் ?