உகாதி திருநாள்: கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதல்வர் கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி வாழ்த்து:
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் புத்தாண்டு நாளான உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியாகவும், மனநியறைவுடனும் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரையும் திமுக அரசு அரவணைத்துச் செல்கிறது. உகாதி திருநாளுக்கான விடுமுறை முந்தைய அதிமுக அரசு காலத்தில் மறுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பின் திமுக அரசு தான் மீண்டும் உகாதி திருநாளுக்கு விடுமுறை வழங்கியது.
தெலுங்கு, கன்னட மொழிகளைப் பயில விரும்புவோருக்கு தமிழக பள்ளிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்தித்தந்தும், தனி வல்லுநர் குழுக்களை அமைத்து தரமான பாடநூல்களைத் தயாரித்து திமுக அரசு வழங்கியுள்ளது.
கர்நாடக அரசுடன் திமுக அரசு நல்லுறவு கொண்டுள்ளது. அதன் மூலம் அங்கு பல ஆண்டுகளாக மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையைத் திறக்கவும், அதேபோன்று சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையைத் திறக்கவும் ஆவனம் செய்தது.
மேலும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து சேரும் கிருஷ்ணா குடிநீர் தமிழக, ஆந்திர மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை வளர்க்கப்பயன்படும் என்பதால் ஆந்திர மாநில அரசுடனும் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வந்துள்ளது.
தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம் உள்பட பிற மொழிகள் பேசும் மக்களின் நலனைக் காக்க திமுக அரசு தொடர்ந்து பாடுபடும். தமிழகத்தில் இன்று உகாதி திருநாள் கொண்டாடும் அனைத்து தெலுங்கு, கன்னட மக்களுக்கு எனது மனமார்ந்த நலவாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வாழ்த்து:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது உகாதி திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக்ததில் உள்ள தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக்காத்து அதேசமயத்தில் தமிழ் மக்களோடு ஒற்றுமையுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும், வளத்தையும், நலத்தையும், வெற்றியையும் தரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்து என் இனிய உகாதி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications