குற்றால சாரல் திருவிழா: அமைச்சர் கோகுல இந்திரா துவக்கி வைத்தார்

குற்றாலத்தில் நேற்று சாரல் திருவிழா துவங்கியது. இதை சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார். தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் நடராஜன் வரவேற்றார்.
சுற்றுலாத்துறை மற்றும் பண்பாட்டு துறை முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, சுற்றுலா மேலாண்மை இயக்குனர் மோகன்தாஸ், நெல்லை எம்.பி. ராமசுப்பு, எம்.எல்.ஏ.க்கள் மைக்கெல் ராயப்பன், துரையப்பா, டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் கேபி குமார் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா பேசும்போது,
உலகம் போற்றும் சுற்றுலாத் தலமாக குற்றாலம் விளங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றும். குற்றாலத்தில் தீம் பார்க் அமைக்க எம்.எல்.ஏ. சரத்குமார் கூறினார். இது பற்றி பரிசீலனை செய்யப்படும். வெளி நாட்டினர் அதிகளவில் வரும் பகுதியாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசும்போது, இயற்கை வளம் பாதுகாக்கப்படும். இதற்கு எவ்வழியில் பாதகம் ஏற்படுத்த முயன்றாலும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றாலம் உலக சுற்றுலா வரைபடத்தில் சேர்க்கப்படும் என்றார்.
தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் பேசும்போது, குற்றாலம் மேம்படுத்தப்பட வேண்டும். குற்றாலத்தில் சீசன் காலத்தில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உலக அளவில் சிறந்த சுற்றுலாத் தலமாக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications