அனைவரும் சேமிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க முதல்வர் வேண்டுகோள்

உலக முழுவதும் நாளை (அக்டோபர் 30) உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் வீணாக்கப்படுவதை தடுத்து, அடுத்த தலைமுறையினருக்காக சேமித்து வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆண்டுத்தோறும், உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களுக்கு சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கவே ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி 'உலக சிக்கன நாள்' கொண்டாடப்படுகிறது. இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு என்பதால் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சேமிக்கும் பழக்கம் சிறுவயது முதலே துவக்க வேண்டும்.
நமது வீடும், நாடும் நலம் பெறவும், மக்கள் வாழ்வு வளம் பெறவும், அனைவரும் சேமிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். அஞ்சலகங்களில் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்கும் போது, அத்தொகை 'சிறு துளி பெருவெள்ளம்' என பெருந்தொகையாகி நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பல வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.
இதற்காகவே தமிழக அரசு சேமிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம் பெறவும், இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றவும், வீட்டின் அருகிலுள்ள அஞ்சலகத்தில் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை துவங்கி சேமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்", என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications