திருச்செந்தூர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியது
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவில் உண்டியலில் நவம்பர் மாதம் வசூலான காணிக்கை எண்ணும் பணி கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்தது.
உதவி ஆணையர்கள் செல்லத்துரை, வீரராஜன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, முதுநிலை கணக்கு அலுவலர் வெங்கடாசலம், கண்காணிப்பாளர்கள் ராமசாமி, வெங்கடேஷ், கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த 8ம் தேதி திறக்கப்பட்ட உண்டியலில் ரூ.53,16,775 காணிக்கையும், கடந்த 29ம் தேதி எண்ணப்பட்ட போது உண்டியலில் ரூ.44,15,127 காணிக்கையும் கிடைத்தது. மேலும் மாதம் ஒருமுறை எண்ணப்படும் அன்னதான உண்டியலில் ரூ.5,83,926 ரொக்கமும், கோசாலை உண்டியலில் ரூ.29,844 ரொக்கமும் கிடைத்தது.
ஆக கடந்த மாதம் மட்டும் உண்டியல் மூலம் ரூ.1,03,45,672 கிடைத்துள்ளது. அத்துடன் உண்டியலில் காணிக்கையாக தங்கம் 923 கிராமும், வெள்ளி 5,020 கிராமும் கிடைத்துள்ளது.