காதல்.. தாய்மை இரண்டு மட்டும்...!

ஒரு பெண் கர்ப்பம் தரித்து, தாய்மைப் பேறு பெற்று ஒவ்வொரு நாளையும் எப்படி பூரிப்புடன் கடந்து செல்கிறாளோ... அதுபோலத்தான் காதல் வயப்பட்டவர்களும்.
ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு மணியையும், ஒவ்வொரு நாளையும் அவர்கள் பூரிப்புடன் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து, சந்தோஷித்து கடப்பதைப் பார்க்க - காதல் அனுபவம் உங்களுக்கு கண்டிப்பாக வேண்டும்.
எப்போது தூங்கினேன்
எப்போது எழுந்தேன்
தெரியவில்லை பெண்ணே..
என் தேவதை ... உன் முகம்
ஒன்று மட்டும் என் நினைவில்
காலம் எப்படிப் போனால் எனக்கென்ன..
நீதான் என்னுடனேயே இருக்கிறாயே..
தாய்மைக்கு பாரம் தெரியாது என்பார்கள். பாரம் உணர்பவர்கள் தாய்மை உணர்வு கொண்டவர்களாக இருக்கவும் முடியாது. அதுபோலத்தான் காதலும். இதை வைத்துத்தான் வைரமுத்து கூட அழகான பாடலை வடித்திருந்தார்.
ஒவ்வொரு காதலும் சுகமான சுமைதான். அந்த சுமையை இறக்கி வைக்க எந்தக் காதலனும், காதலியும் விரும்புவதே இல்லை. மனசுக்குள் எவ்வளவு கவலை இருந்தாலும் காதலியின் குரலைக் கேட்டாலே பஞ்சு போல பறந்து விடாதா கவலை...?
அதேசமயம், காதலி அல்லது காதலனின் குரல் மட்டுமே கேட்காமல் போனால், மனசெல்லாம் எப்படி வலிக்கும் தெரியுமா... அதன் வலியை வார்த்தையி்ல சொல்ல வார்த்தைகள் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று சொல்லலாம்.
உன் பேச்சு கேட்காமல் போனால் கூட பரவாயில்லை
உன் மூச்சுக் காற்றை சற்றே அனுப்பி வை
சுவாசித்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுகிறேன்...
ஒவ்வொரு காதலனுக்கும், காதலிக்கும் சுவாசமே அவர்களின் பேச்சுதான். விஷயம் இருக்கிறதோ இல்லையோ ஏதாவது பேசியாக வேண்டும். பேச்சைக் கேட்காமல் போனால், அல்லது வழமையான பேச்சாக இல்லாமல் போனால் மனது படும் பாட்டை சொல்லி மாள முடியாது.
இதயத்தின் தடதடப்பை விட
உன் அமைதியின் படபடப்பு
என்னைக் கொல்கிறது சகியே..
காதலில் பாரத்திற்கு இடமில்லைதான்... ஆனால் காதலர்களின் அமைதி மனதில் ஏற்றும் பாரத்திற்கும் அளவில்லைதான்.. எனவே காதலர்களே, காதலுடன் இருங்கள்..எப்போதும்.












Click it and Unblock the Notifications