சவுதி அரேபியா அல்-கோபரில் நடந்த ஐ.எஸ்.எப். அரசியல் பயிலரங்கம்
சவுதி: கடந்த 12ம் தேதி மாலை 6 மணிக்கு சவுதி அரேபியாவில் உள்ள அல்-கோபர் ரஃபா மருத்துவமனை அரங்கத்தில் இந்தியன் சோஷியல் ஃபோரம்(ஐ.எஸ்.எப்.) சார்பிலான மாபெரும் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.
ஜாஹிர் ஹுஸைன் தலைமையேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிட அலி ஹுஸைன் வரவேற்புரை ஆற்றினார்.
நமது பயணம் என்னும் தலைப்பில் நாகூர் மீரான் துவக்க உரையாற்ற, இந்திய அரசியலும்-இன்றைய சூழலும் என்னும் தலைப்பில் தமிழ் மாநில கமிட்டியின் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் தமது உரையின் போது, மதசார்பின்மையே தேசத்தின் பாதுகாப்பு என்னும் அம்சத்தை நீக்கிவிட்டு மதவாதத்திற்கு உயிரோட்டம் கொடுக்க முயலும் பாஜக அரசின் போக்கை மதசார்பின்மை சக்திகள் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் ரயில்வே கட்டண உயர்வு, வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பண மீட்பில் தோல்வி, அரசுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தல் போன்ற மக்கள் விரோத செயல்களையும், பொதுசிவில் சட்டம், கட்டாய மதமாற்ற அச்சுறுத்தலின் மூலம் மத மாற்ற தடைச்சட்டம் கொண்டு வர முயலுதல், சமஸ்கிருதத்தையும், பகவத் கீதையையும் தேசிய அடையாளங்களாக்கிட முனைப்பு காட்டுதல்,
அதன் மூலம் இந்தியாவில் இருந்து வரும் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் குழி தோண்டி புதைக்க முயற்சிக்கும் பாஜகவின் தவறுகளை பட்டி, தொட்டியெங்கும் மக்களிடம் பரப்புரை செய்திட வேண்டுமென்று ஐ.எஸ்.எப். தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.
சமூக தீமைகளின் ஆணி வேறாக இருக்கும் மது உள்ளிட்ட போதை செயல்களில் ஈடுபாடற்ற இளைஞர்களும், லஞ்சம், ஊழல் போன்ற தேசத்தின் அவமானகரமான செயல்களில் இருந்து விலகி இருக்கும் நல்லோர்கள் அனைவரும்,
இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் ஆதரவை பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. எனப்படும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவில் தங்களை இணைத்து கொள்ள வேண்டுமென்று கிழக்கு மாகாண ஐ.எஸ்.எப். தமிழ் மாநில கமிட்டியின் பொது செயலாளர் திப்புசுல்தான் அழைப்பு விடுத்தார்.
அப்துல் காதர் நன்றியுரையுடன் பயிலரங்கம் நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கு சிஹாத், அல்-கோபர், தம்மாம் உள்ளிட்ட கிளைகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.