வெற்றிக்குத் திலகம்- அமுது
உனக்கும் எனக்கும் இடையே விதைத்தெழுந்த
இப்போரில் இன்ப வாகைசூடி வெற்றிவலம்
வரப்போவது நீயா இல்லை நானா?
காதலாய் மடலெழுதி மனத்தைக் களிப்பூட்டிக் காட்டினேன்
கட்டென்ற தடைதாண்டி களம் வந்து வென்றாய் நீ!
வளையலென்றும் வகைவகையாய்ச் சேலையென்றும் உனக்கு
வாங்கித்தந்து விளம்பினேன் என் அன்பை! எத்துணியும்
திரையிடாத தேவதையே! உன் கட்டான தேகழகை
கண்ணுதலாய் நீ காட்டத் தோற்றேனே நானன்றும்!
உணவங்காடிகளில் அறுசுவையை மிஞ்சும் பலபண்டச்
சோறுகளில் படைத்தேன் என் அன்பை உயர்வென: நீ
அமிழ்தூறுமுன் இளமை மதுச்சுவையில்
மயக்கியெனை மீண்டும் மீண்டும் மூழ்கடித்தாய்
தொல்லையோ எல்லைகொள்ளாத் துன்பமோ? துயர்துடைத்துத்
தெம்பளிக்கும் துணையாய் உடனிருக்கப் பறந்து வரும் நான்
உன்கண்ணில் நீர் கண்டால் உதிரம் கொட்டும் அன்பென்றேன்
உழைத்தும் பாரினில் உயிர் கொடுத்தும் உனைக்காக்கும்
நானே நாளெல்லாம் உயர்வென்றேன் அன்பிலே!
உனைப்போலவே உள்ளான் என மாந்தோர் வியந்திடவே
என்னுருவிலோர் கலை படைத்து ஏவி நீ விடுத்த அக்கணைக்கு
ஈடாமோ? என் அன்பு அடிபணிந்துன் வெற்றிக்கு திலகமிடும்!
- அமுது([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.