விடியலைத் தேடும் வெண்புறாக்கள்- தமிழீழதாசன்
அழகிய அந்தி
மேற்குவானில்
சிவப்பு சாயம்
தயாரிக்கப்படுமிடம்...!
தினமும்...
அந்திநேரம்
வருகிறது
போகிறது
அந்தநேரம்
நாங்கள்
விளையாடிக்கொண்டிருப்போம்..!
ஓடிப்பிடித்து
கிந்தியடித்து
கிளித்தட்டு மறித்து
கிட்டிப்புள்ளு அடித்து
நாங்கள்
விளையாடுவதில்லை..!?
நமக்குப் பிடித்த
ஓரே ஒரு விளையாட்டு
இயக்கமும் ஆமியும்...!!
விளையாட்டில் வெற்றிதோல்லி
காணுமுன்னமே
என்
அன்னையழைக்கும் குரல்கேட்கும்
"அம்மா" இன்னும் கொஞ்சநேரம்...?
கெஞ்சினாலும் விடமாட்டாள்..!
பாடம் சொல்லித்தர வேண்டுமாம்..!!!
அவள் தினமும் அப்படித்தான்
நிம்மதியாய்
விளையாட விடமாட்டாள்
எனக்கு
அம்மாவை அதிகம் பிடிக்கும்
ஆனால்...
அடிக்கடி படிக்கச்சொன்னால்தான்
ஆத்திரம் வரும்....!
விளையாட்டைவிட
அப்படியென்ன படிப்பு வேண்டியிருக்கென்று
அப்போதெல்லாம் நான்
அழுவதுண்டு...!
இரவு எட்டுமணிவரை
அல்லது
இடையில் யாரும் வரும்வரை
அன்னையின்
பள்ளிப்பாட
வாழ்க்கைப்பட
வகுப்புகள் இடம்பெறும்..!
எட்டு மணிக்குப்பின்பு
கிட்ட இருக்கும்...
ஆழக்கடல்...
இசைக்க இசைக்க
முற்றத்து மல்லி
மணக்க மணக்க
ஆனந்தம் அலைமோத
நிலாச்சோறு..!
அதில்...
எத்தனை சுகம்..!
அடடா..
அலைகள் இசைபாட
மேகம் பனி தூவ
நிலவு விளக்கேற்ற
மணலில் கால்புதைத்து
உண்டு...
உறங்கிய நாட்கள்
இவை...
மீண்டும் வரவேண்டும்
ஒரு தடவை
கனவிலாவது..!!!