AIஐ நம்பி கொத்தாக ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய பிரபல நிறுவனம்.. இப்போ மரண அடி! இது தேவை தான்
சியாட்டில்: இந்தாண்டு தொடக்கத்தில் AI மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பல்வேறு நிறுவனங்களும் AIஐ கொண்டு வர ஆர்வம் காட்டினர். அப்படி ஊழியர்களைப் பெரியளவில் குறைத்துவிட்டு AI பக்கம் செல்ல ஒரு நிறுவனம் முயன்றது. ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு என்பதை அந்நிறுவனம் சில மாதங்களில் உணர்ந்து கொண்டது.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
AI- கடந்த சில ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப் போடுவது இந்த வார்த்தை தான். செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக வளரும் நிலையில் சர்வதேச அளவில் அதற்கான முதலீடுகள் குவிந்தன. பல நிறுவனங்கள் ஏஐ நிச்சயம் மனிதர்களைக் காலி செய்யும் என நினைத்தனர். ஊழியர்களுக்குப் பதிலாக AIஐ கொண்டு வந்தால் சம்பளமாக தரும் தொகையில் பெருமளவு குறையும் என நம்பின. ஆனால், இப்போது ஓராண்டில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

சேல்ஸ்ஃபோர்ஸ்
சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தில் நடந்த விஷயத்தை நாம் இதில் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். AI வந்தபோது, அதை ஆரம்பத்திலேயே பெரியளவில் பயன்படுத்த ஆரம்பித்த சர்வதேச நிறுவனம் சேல்ஸ்ஃபோர்ஸ். தொடக்கம் முதலே இவர்கள் AIக்கு ஆதரவாகவே இருந்தனர். அதன் சி.இ.ஓ மார்க் பெனியோஃப், AI மனிதர்களின் இடத்தைச் சீக்கிரம் பிடிக்கும் என வெளிப்படையாகவே கூறினார்.
இதனால் அங்கு மிக பெரியளவில் ஆட்குறைப்பும் கூட செய்யப்பட்டது. அங்கு 9,000 ஊழியர்கள் வேலை செய்து வந்த நிலையில், அது 5,000ஆக குறைக்கப்பட்டனர். ஆட்குறைப்பிற்கு AI காரணம் என்றனர். இந்த ஆட்குறைப்பு தொடரவே செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. பல துறைகளிலும் ஏஐ வந்துவிடும்.. மனிதர்கள் வேலை போய்விடும் என்றே நினைத்தனர். ஆனால், ஓராண்டு கூட முடியவில்லை. அதற்குள் நிலைமை மாற ஆரம்பித்தது.
சொதப்பல்
AI டூல்கள் செயல்பாடுகளில் பல்வேறு குறைகள் தென்பட ஆரம்பித்தது. ஏஐ டூல்களுக்கு ஒரே நேரத்தில் 8 Instructionகளை மட்டுமே கொடுக்க முடிகிறது. 8க்கும் மேல் ஒன்றைக் கூடுதலாகக் கொடுத்தால் கூட அதன் செயல்திறன் பெரியளவில் குறைகிறதாம். அதேபோல AI Drift என்ற பிரச்சினையும் இருக்கிறது. அதாவது ஒரு யூசர் தொடர்பில்லாத விஷயம் குறித்து பேசும்போது, AI டூலும் அது குறித்துப் பேச ஆரம்பித்துவிடுகிறது. தனது வேலையை மறந்துவிடுகிறது. இது 2வது பெரிய சிக்கல்.
அதேபோல AIஐ இன்னும் முழுமையாக நம்ப முடிவதில்லையாம். ஒரு நிறுவனம் இப்படித் தான் யூசர்களிடம் இருந்து கருத்து கேட்கும் மெயில் சர்வே அனுப்பும் வேலையை AI வசம் ஒப்படைத்து இருந்தது. கொஞ்ச நாளுக்குப் பிறகு எந்தவொரு எச்சரிக்கை அல்லது தகவல் இல்லாமல் சர்வே பணிகளை AI நிறுத்திவிட்டதாம். ஏன் இதுபோல நிறுத்தியது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பல்டி அடித்த தலைமை
இதுபோல ஏகப்பட்ட பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் முதலில் ஏஐ நோக்கி ஓடிய சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் தலைமையே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இதுபோன்ற சிக்கல்களால் ஏஐ பயன்பாட்டை அவர்கள் குறைத்துவிட்டனர். பழைய டூல்களுக்கு திரும்பியுள்ளனர். சிக்கலான கார்ப்பரேட் பணிகளுக்கு ஏஐ செட் ஆகாது என்பதையே சேல்ஸ்போர்ஸ் எக்ஸ்பிரிமெண்ட் காட்டுகிறது.
யாருக்கு பாதிப்பு!
அப்போ ஏஐ எதற்கும் செட் ஆகாதா என கேட்டால்.. இல்லை சில வேலைகளை நிச்சயம் ஏஐ மாற்றி அமைக்கும். அதாவது திரும்ப திரும்ப செய்ய வேண்டிய வேலைகள்.. பிழைகள் இருந்தாலும் பெரிய பிரச்சினை இல்லை என்ற வேலைகளை ஏஐ நிச்சயம் மாற்றி அமைக்கும். ஆனால், மனிதர்களை மொத்தமாகக் காலி செய்ய வாய்ப்பில்லை என்பதையே சேல்ஸ்ஃபோர்ஸ் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications