திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 28ல் தொடக்கம் - நவ.3ல் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகி
Recommended Video
தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில். இங்கு நடைபெறும் முக்கிய விழாவில் கந்த சஷ்டி விழாவும் ஓன்று. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா இம்மாதம் 29ஆம் தேதி தொடங்குகிறது.
கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், தண்ணீரும் பழரசங்களும் மட்டும் குடித்து பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் பாலும் பழமும் சாப்பிட்டு கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், முருகனுக்கு உகந்த சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவேதான் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 29ஆம் தேதி துவங்குகிறது. திருச்செந்தூரில் அன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதய மார்த்தாண்டபூஜையும் நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்குகிறது.
காலை 10 மணிக்கு உச்சிகால பூஜையை தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனையை தொடர்ந்து வேள்விசாலையிலிருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியம் முழுங்க சண்முகவிலாசம் சேர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது.
கந்த சஷ்டி 2 ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 2ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1.00 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் மட்டுமல்லாது முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
நவம்பர் 3 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்மன் தவசுக் காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். இரவு திருக்கோயிலில் வைத்து திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.