தமிழ்நாட்டில் இவி வாகனம் பயன்படுத்துறீங்களா? வருது புதிய மேப்.. நோட் பண்ணுங்க.. எல்லாமே மாறுது
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இ வாகனங்களுக்கு உகந்த பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகனங்களுக்கான ஹப்கள், டிஜிட்டல் சார்ஜிங் மேப் போன்ற புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட்
தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் (TNGECL) மற்றும் ரிலக்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம் இணைந்து, மாநிலம் முழுவதும் 500 புதிய சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன. அரசுக்குச் சொந்தமான நிலங்களில் இந்த சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு முடிவடைந்த பிறகு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
1,413 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்
தற்போது தமிழ்நாட்டில் 1,413 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
இந்த முயற்சியானது, வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவைக் குறைத்து, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மின்சார போக்குவரத்து புரட்சியில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார வாகனங்களுக்கான (EV) பொது சார்ஜிங் நிலையங்கள்
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான (EV) பொது சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அண்மைய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட 316 மின்சார வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையம் மட்டுமே உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட அளவான ஆறு முதல் 30 வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் நிலையம் என்ற எண்ணிக்கையை விட மிக அதிகம்.
தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனம் (ITDP) இணைந்து தயாரித்த இந்த அறிக்கை, மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான தமிழகத்தின் ஆரம்பகட்ட முயற்சிகளுக்கு இந்த குறைபாடு தடையாக உள்ளது என எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, மாநிலத்தில் 4,47,469 மின்சார வாகனங்கள் இருந்தபோதிலும், வெறும் 1,413 பொது சார்ஜிங் நிலையங்கள் மட்டுமே உள்ளன.
தமிழ்நாடு மின்சார வாகனங்கள்
அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஒரு சார்ஜருக்கு 81 வாகனங்கள் என்ற விகிதத்துடன் மிகக் குறைந்த வாகன-சார்ஜிங் நிலைய விகிதம் காணப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் இது அதிகபட்சமாக ஒரு சார்ஜிங் புள்ளிக்கு 510 மின்சார வாகனங்கள் என்ற அளவில் உள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டின் பின்னடைவை சரி செய்யும் விதமாக, தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இ வாகனங்களுக்கு உகந்த பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகனங்களுக்கான ஹப்கள், டிஜிட்டல் சார்ஜிங் மேப் போன்ற புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
முக்கியமாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி , சேலம், தஞ்சாவூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் இந்த சார்ஜிங் மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுக்க இதற்காக சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து மின்சார வாரியம் செயல்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன.












Click it and Unblock the Notifications