"ஆபரேஷன் நல்லபடியா நடந்துடுச்சி" நடைபாதை வழியாக திருப்பதிக்குச் சென்ற பவன் கல்யாண் மனைவி அன்னா
திருப்பதி: தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடந்ததை அடுத்து அவரது மனைவி அன்னா லெஸ்னேவா, திருப்பதி ஏழுமலையானை நடைபாதையில் சென்று கண்ணீர் மல்க சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திரா துணை முதல்வராக இருப்பவர் நடிகர் பவன் கல்யாண். இவருக்கு வலது தோள்பட்டையில் உள்ள தசை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தோள் பட்டையில் அதிக வலியுடன் இருந்தார்.

இந்த நிலையில் பவன் கல்யாண் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பை அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வலது தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
பவன் கல்யாணை நேரில் சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். அவரது மனைவி அன்னாவிடமும் நலம் விசாரித்தார். பவனை சந்தித்ததும் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: மக்களிடையே இருக்கும் போது பவன் பெரும்பாலும் தன்னையே மறந்துவிடுவார். அதனால்தான் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இந்த வலியால் அவர் பலநாட்களாக அவதிப்பட்டு வருகிறார். தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு பவன் கல்யாண் நன்றாக இருக்கிறார். அவர் 3 வாரங்கள் ஓய்வு எடுத்ததும் பிசியோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
அதன் பிறகு மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் தனது மக்கள் பணியை தொடருவார் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மேலும் பவன் கல்யாணுக்கு அளித்த சிகிச்சை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்யாணின் வலது தோள்பட்டையில் காயம் இருப்பது கண்டறியப்பட்டது.
supraspinatus மற்றும் infraspinatus ஆகிய இரு தசைநார்கள் கிழிந்துள்ளன. அத்துடன் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஜூலை 11 ஆம் தேதி பவனுக்கு ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவரது உடல்நலம் நன்றாக இருக்கிறது. அவருக்கு ஓய்வு தேவை. காயங்கள் ஆறியதும் தோள்பட்டைக்கு சில பயிற்சிகளை செய்ய வேண்டும். அடுத்த 4 வாரங்களில் அவரது தோள்பட்டை முழுமையாக சீரடையும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பவன் கல்யாணுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அவருக்கு வலி ஏற்பட்டு வந்தது. தற்போது ஒரு தோள்பட்டையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்னொரு தோள்பட்டையில் 2 மாதங்கள் கழித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
வலது தோள்பட்டையில் பவனுக்கு மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து அவரது மனைவி அன்னா, திருப்பதி ஏழுமலையானை நடைபாதை வழியாக சென்று தரிசனம் செய்தார். அங்கு மனமுறுகி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அன்னா இது போல் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதை ஆந்திர மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். அத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் படித்து வந்த பவனின் மகனுக்கு பள்ளியில் நடந்த தீவிபத்தில் தீக்காயம் ஏற்பட்டது.
அப்போது தனது மகனுக்கு உடல்நிலை சரியானதும் திருப்பதி கோயிலுக்கு சென்ற அன்னா, அங்கு தனக்கு மொட்டை போட்டுக் கொண்டு வேண்டுதலை நிறைவேற்றினார்.













Click it and Unblock the Notifications