டிராபிக் ரூல்ஸ்.. சரமாரியாக பாயும் அபராதம்.. ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன அரசு.. வாகன ஓட்டிகளே இதை படிங்க
சென்னை: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கியமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டுபிடிக்க முக்கியமான நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
அரசு தகவல்: இப்படிப்பட்ட நிலையில்தான் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
2019ம் ஆண்டின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை உயர்த்தி தமிழக அரசின் உள்துறை தரப்பில் கடந்த (2022) ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இருந்தும் விதிமீறல்கள் தொடர்வதால், அரசாணையை தீவிரமாக அமல்படுத்தும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அபராதத் தொகையை உயர்த்தியதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் வாகன தணிக்கையில் ஈடுபடுவதை போக்குவரத்து மற்றும் காவல் துறைகளை சேர்ந்தவர்கள் தயக்கம் காட்டுவதாகவும், இதை சாதகமாக பயன்படுத்தி விதிமீறி வாகனங்களை இயக்குவது தொடர்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதிவேகமாக செல்வது, போதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனம் இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் கொள்ளை, நகைபறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய சாலையில் செல்லும் இரு சக்கர வாகனம், ஷேர் ஆட்டோ முதல் நெடுஞ்சாலையில் இயங்கும் கன ரக வாகனங்கள் வரை போக்குவரத்து விதிகளை மீறி செல்வதால் உயிரிழப்புகளும், காயமடைந்து உடலுறுப்புகளை இழப்பதும் தொடர்கதையாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
விதிமீறலில் ஈடுபடுவோரை மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பணியாற்ற உத்தரவிட வேண்டுமென தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு பரிந்துரை செய்து ஜூலை 4ஆம் தேதி கடிதம் அனுப்பியதாகவும், அதை பரிசீலிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டு எந்த சம்பவத்தை மனுவில் தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காடிய நீதிபதிகள், போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications