“தொடர்ந்து நாம் குறி வைக்கப்படுகிறோம்” - திருமாவளவன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
சென்னை: திமுக கூட்டணியில் இருந்தபோதும் கொச்சைப்படுத்தியவர்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற போதிலும் இழிவாக விமர்சிக்கிறார்கள்.. இன்னும் நாம் குறிவைக்கப்படுகிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசுகையில், "விசிகவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அங்கீகாரம் பெற்ற மாநில கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்த இயக்கம் என்கின்ற தகுதிகளை நாம் வென்றெடுத்து இருக்கிறோம். அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்று இருக்கிறோம். இன்னும் பன்மடங்கு வீரியத்துடன் நாம் களமாட வேண்டிய தேவை உள்ளது.

இதனால் தான் திமுக கூட்டணியில் இருந்த போது கொச்சைப்படுத்தியவர்கள், இன்றைக்கு தவெக கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த நிலையிலும் மிகக்கடுமையாக இழிவாக, விமர்சித்து வருகிறார்கள். நாம் இன்னும் குறிவைக்கப்படுகிறோம் என்பது தான் இதன் பொருள். நம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு நாம் காய்களை நகர்த்த வேண்டும். நம்முடைய களம் வேறு எவராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத களம். வேறு எவராலும் நம்மை அப்புறப்படுத்திவிட முடியாத களம். வேறு யாரும் நம்மோடு போட்டி போட முடியாத களம் என்பதை பல முறை சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன்.
இன்று தலைகீழாக மாறியிருக்கும் அரசியல் சூழலில், நாம் மீண்டும் மீண்டும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவே களமாடி வருகிறோம். தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக செயலாற்றி வருகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்." என திருமாவளவன் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது விசிக. தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த விசிக, தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. அக்கட்சி சார்பில் வன்னி அரசு சமூக நீதி துறை அமைச்சராக உள்ளார்.
எனினும் இன்னும் அவர்களுடன் கூட்டணியில் இணையவில்லை. இப்படியான நிலையில் தான் தமிழ்நாட்டில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியை தங்களுக்கு வழங்க வேண்டும் என விசிக தரப்பில் இருந்து தவெகவிடம் கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications