பழனி 1.40 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு! யார் அந்த மேலிட புள்ளி? ஸ்ட்ரைட்டாவே கேட்டுட்டாரு கிருஷ்ணசாமி
திண்டுக்கல்: உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு சொந்தமான, ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய்க்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு 2 பேர் சேர்ந்து முறைகேடாக விற்றிருக்கிறார்கள் அதிலும் மிகக் குறைவாக மதிப்பீடு செய்து, கோயில் நிர்வாகத்திற்குத் தெரியாமல் தனி நபர்கள் 2 பேரின் பெயரில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்துள்ளார்கள்..

பழனி முருகன் நிலம் பத்திரப்பதிவு
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முன்னதாக தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து பழனி கோயிலின் செயல் அலுவலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிர்வாகத்திடம் கேட்காமல் செய்யப்பட்ட பத்திரப்பதிவு செல்லாததாகவே கருதப்படும் என்று சொல்லி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததோடு, தனிநபர் பெயரில் பதிவு செய்யப்பட்ட பட்டாவையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். அதுமட்டுமல்ல, இந்த முறைகேட்டில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை வெறும் பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கறாராக தெரிவித்துள்ளனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி
கடந்த சில நாட்களாகவே இந்த பழனி கோயில் நிலம் மோசடி விவகாரம்தான் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. இப்போது அரசியல் கட்சி தலைவர்களும் இதைக்கேட்டு கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்தவகையில் டாக்டர் கிருஷ்ணசாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் கூறும்போது, "பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள, கார் நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம், இந்து சமய அறநிலையத்துறையின் ஆட்சேபனைக்குரிய ஆணை இருக்கும் நிலையிலும் கடந்த ஜூலை 6ம் தேதி விதிமுறைகளுக்கு மாறாக முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 3 தனிநபர்களின் பெயர்களில் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
மேலிடப் புள்ளி யார்
இதற்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் மணிகண்டன் உள்ளிட்ட அடிமட்ட அளவில் ஒருசிலர் மீது மட்டும் வெறுமனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மையை வெளிக்கொண்டு வராது.. மேலிடப் புள்ளிகளின் ஆதரவும் தூண்டுதலும் இல்லாமல் இவ்வளவு பெரிய நில மோசடி நடைபெற வாய்ப்பில்லை.
முதலமைச்சர் விஜய் அரசு பொறுப்பேற்ற பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டான இந்த விவகாரத்தில், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த நினைக்கும் அந்த "மேலிடப் புள்ளி" யார் என்பதை வெளிக்கொணரவும், இதில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் ஏதுவாக, உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியின் கீழ் நடுநிலையான, நேர்மையான, மற்றும் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று முதலமைச்சருக்கு மூத்த தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.














Click it and Unblock the Notifications