செந்தில் பாலாஜி தந்த கரூர் எவிடன்ஸ் என்ன? முதலமைச்சர் விஜய்க்கு அவர் மீது கோபம் வர காரணம் இதுதானா?
சென்னை: "செந்தில் பாலாஜியை சிபிஐ மிகவும் குறுகிய நேரம்தான் விசாரித்தது. அவர் விசாரித்துவிட்டு வந்த பிறகுதான், கரூர் சம்பவ இடத்திற்கு வெளியே இருந்து ஆட்களைக் கூட்டிவந்து ஷூட்டிங் கேமராக்கள் எல்லாம் அமைத்து எடுத்த அனைத்து விவரங்களையும் ஊடகங்கள் உடைத்தன. "நம்மை அம்பலப்படுத்தி மாட்டிவிட்டவர் செந்தில் பாலாஜி" என்பதால்தான், விஜய் தரப்பிற்கு செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட கோபம் இருக்கிறது" என்று மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அய்யநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
aramnaadu என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "எனது ஆட்சி வெளிப்படைத்தன்மையோடு இருக்கும்" என்று சொன்னீர்களே விஜய்... பிறகு ஏன் இப்படி நடந்தது? போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டால் பதில் இல்லை. புஸ்ஸி ஆனந்திடம் கேட்டால் அவரும் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே மழுப்பிவிட்டு போகிறார். விஜய் அரசு எதைக் கண்டு நடுங்குகிறது? எதைக் கண்டு பயப்படுகிறது? ஒரு பொது நிகழ்ச்சியை நீங்களே விளம்பரம் செய்து, பத்திரிகையாளர்களுக்கு அனுமதிச்சீட்டுகள் தந்துவிட்டு, பிறகு வெளியேறு என்று சொல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

கரூரில் அன்றைய தினம், "அந்த இடத்திற்குள் செல்ல வேண்டாம், மக்கள் நெரிசல் அதிகமாகிவிட்டது, உங்களுடைய பஸ்ஸை கொண்டு சென்றால் கூட்ட நெரிசலில் அசம்பாவிதம் நடக்கும்" என்று டிஎஸ்பி உங்களிடம் சொல்லியிருக்கிறார்.
கரூர் சம்பவம் என்ன நடந்தது
ஆனால் அதையும் மீறி அந்த இடத்திற்கு பஸ்ஸை கொண்டு போய் நிறுத்துங்கள், அங்குதான் நாங்கள் எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம்" என்று சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் அங்குதான் ஷூட்டிங் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்!
மாலை 7.10 மணிக்கு அந்தப் பஸ்ஸை கொண்டு போய் நிறுத்துகிறார்கள். அதுவரை அங்கு யாரும் உயிரிழக்கவில்லை, மயக்கம் போடவில்லை. 7.10 மணிக்கு விஜய் வருகிறார், 7.11-க்கு பேச ஆரம்பித்து, 7:37-க்கு அங்கிருந்து கிளம்புகிறார். அதற்குள் 41 பேர் இறந்துபோய்விட்டார்கள்!
பஸ்ஸை அங்கே கொண்டு போய் நிறுத்தியதால்தான் 2 பக்கமும் மக்கள் தள்ளப்பட்டு நெரிசலில் இறந்தார்கள் என்பதை எல்லா பத்திரிகைகளும் அன்று எழுதின.. ஆனால் இப்போது வந்து "போலீசார் எங்களை வழிகாட்டவில்லை, தவறாக வழிகாட்டிவிட்டது, தெரியாமல் சல்யூட் அடித்துவிட்டேன்" என்று மாற்றி மாற்றிப் பேசுகிறார் ஒரு முதலமைச்சர்.
அசம்பாவிதத்தை தடுத்தது ஸ்டாலின் தான்
உங்களிடம் தானே காவல்துறை இருக்கிறது. காவல்துறையினர்தான் தவறு செய்தார்கள் என்றால் அவர்களை விட்டு அறிக்கை கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்! சிபிஐ உங்களை காப்பாற்ற போவதில்லை. ஈரோட்டிலோ, உங்கள் விக்ரவாண்டி மாநாட்டிலோ, மதுரை மாநாட்டிலோ மக்கள் இறந்துபோனதற்கு காவல்துறையா காரணம்? விக்ரவாண்டி மாநாட்டில் நடக்கவிருந்த அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியது 8,000 காவல்துறையினர்தான். அன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின்.
கரூரில் சதி நடந்ததற்கு ஒரே ஒரு ஆதாரத்தை சொல்லுங்கள்? முதலில் முத்தமிழ்க்காரர்கள் செய்தார்கள் என்றீர்கள், பிறகு செந்தில் பாலாஜி செய்தார் என்றீர்கள், அதன் பிறகு கத்தியால் குத்தினார்கள், தண்ணீர் பாட்டில் பறந்தது என்றீர்கள்... எல்லாமே பொய் என்று உடைந்துபோய்விட்டது. காவல்துறை அங்கு வாக்குமூலம் வாங்கியிருக்கிறது. 41 பேரின் உயிர் போயிருக்கிறது.
ஸ்டாலின் சொன்ன ஜனநாயக முறை
"காவல்துறைக்குக் கட்டுப்படுவேன்? என்று விஜய் பேசுகிறார், ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்பதைத் திருச்சி சந்திப்பில் நிரூபித்தார். காலையில் 10 மணிக்கு பேச வேண்டியவர் மதியம் 2:30 மணிக்கு வந்து பேசுகிறார்.
அன்றைய தினம் ரோட் ஷோ நடத்த அனுமதியே இல்லை என்றாலும் ரோட் ஷோ நடத்தினார்கள். இப்படி செய்ததற்கு, அன்றைக்கு ஸ்டாலினுக்குப் பதிலாக ஜெயலலிதா இருந்திருந்தால் விஜய் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்கு முடியும் வரை எந்தவொரு நிகழ்ச்சியும் செய்ய முடியாதபடி தடை உத்தரவு போட்டிருப்பார். ஆனால் ஸ்டாலின் அப்படி செய்யவில்லை. 'விசாரணை ஆணையம் அறிக்கை தரட்டும், அதன் பிறகு முடிவெடுப்போம் என்று ஜனநாயக முறையில் அணுகுகிறார்.
செந்தில் பாலாஜி - உதயநிதி ஸ்டாலின் அரசியல்
செந்தில் பாலாஜியை சிபிஐ மிகவும் குறுகிய நேரம்தான் விசாரித்தது. அவர் விசாரித்துவிட்டு வந்த பிறகுதான், கரூர் சம்பவ இடத்திற்கு வெளியே இருந்து ஆட்களைக் கூட்டிவந்து ஷூட்டிங் கேமராக்கள் எல்லாம் அமைத்து எடுத்த அனைத்து விவரங்களையும் ஊடகங்கள் உடைத்தன. "நம்மை அம்பலப்படுத்தி மாட்டிவிட்டவர் செந்தில் பாலாஜி" என்பதால்தான், விஜய் தரப்பிற்கு செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட கோபம் இருக்கிறது.
இதே விஷயத்தைத்தான் ஆதவ் அர்ஜுனாவும் பேசினார். "உதயநிதியின் அரசியலுக்காக காவல்துறையை ஏவி முந்தைய அரசு எங்கள் மக்களைக் கொலை செய்துவிட்டது" என்று பேசுகிறார்கள். அதாவது பழி முழுமையாகக் காவல்துறையின் மீது. இந்த சம்பவத்தை விசாரிக்கிற சிபிஐ ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? ஏனென்றால் குற்றப்பத்திரிகையில் விஜய் தரப்பின் மீதுதான் தவறு என்று இருக்கிறது. போலீஸின் அட்வைஸை இவர்கள் கேட்கவில்லை, அலட்சியப்படுத்தினார்கள் என்ற பிரிவுகள் அதில் உள்ளன.
குற்றப்பத்திரிகையில் உள்ள கன்டென்ட்
இப்போது விஜய்யை காப்பாற்றுவதற்காக சிபிஐ, அதாவது பாஜக, இந்த விஷயத்தை சமன் செய்யப் பார்க்கிறது. "'விஜய்யும் தாமதமாக வந்தார், கூட்டமும் அதிகமாகக் கூடியது, காவல்துறையும் சரியாக பாதுகாப்பு தரவில்லை" என்று அனைத்தையும் கலவையாக சாம்பார் ஆக்கி, எல்லார் மீதும் பழியைப் போட்டு வழக்கை நீர்த்துப்போகச் செய்து விஜய்யைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள். சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கும், இப்போது விஜய் பேசுவதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.
இப்போது கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லப் போன இடத்தில், அதையும் இடைத்தேர்தல் பிரச்சாரமாக மாற்றிவிட்டு வந்துவிட்டார் விஜய். அரசுப் பணி வழங்கியதிலும் நிறைய எதிர்ப்புகள் வருகின்றன. விஜய் தவெக தலைவராக மட்டும் நடந்து கொள்ளக் கூடாது, முதலமைச்சராகப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். எப்போது பார்த்தாலும் திமுக மீது பழியைப் போட்டு வெறுப்பு அரசியல் செய்யாதீர்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications