ஜனநாயகன் படம் தயாரித்ததாலேயே.. டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியா? விஜய்க்கு கிளம்பும் எதிர்ப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதியதாக பொறுப்பேற்று இருக்கும் தவெக அரசு, தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதி யார் என்கிற அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தை தயாரித்தார் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே சிறப்பு பிரதிநிதி பதவியை கொடுப்பது நியாயமாக இருக்குமா? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

கொதித்த பாஜக
குறிப்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்த ஜோசப் விஜய் அரசு! என்று விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில், "தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த கே. வெங்கடநாராயணாவை நியமிக்கவிருப்பதாக ஜோசப் விஜய் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
தமிழே தெரியாதவர்
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? அன்னைத் தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாச்சாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்?
டி.கே.சிவகுமாரின் நண்பர்
சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தைச் சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரைப் பிரதிநிதியாக நியமிக்கக் காரணம் என்ன? முதல்வர் விஜய் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரஸின் நிர்பந்தமா?
கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் பேசி மேகதாது அணைப் பிரச்சனையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?
மாற்று சக்தி என்று கூறி, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்!" என்று விமர்சித்திருக்கிறார்.
இதற்கு முன் இருந்தவர்கள் யார்?
கடந்த திமுக ஆட்சியில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.எஸ்.விஜயன் இருந்தார். இவர் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். மட்டுமல்லாது, நாகப்பட்டினம் தொகுதியின் முன்னாள் எம்பியாகவும் இருந்திருக்கிறார். இவருக்கு முன், தளவாய் சுந்தரம் இந்த பொறுப்பில் இருந்தார். இவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். இப்படியாக கடந்த 2006 தொடங்கி 2026 வரை இந்த பொறுப்பில் இருந்தவர்கள் எல்லோரும் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர்கள்தான்.
ஆனால், விஜய் ஆட்சிக்காலத்தில்தான் முதன் முறையாக ஒரு திரைப்பட தயாரிப்பாளர் இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார். எனவே எந்த தகுதியின் அடிப்படையில் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.













Click it and Unblock the Notifications