Draupathi 2 Review: திரௌபதி 2 எப்படி இருக்கு? மோகன் ஜி பிம்பத்தை மாற்றிய படம்! செய்யாறு பாலு ஓபனாக சொல்லிட்டாரு!
சென்னை: திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாம் பாகம் திரௌபதி 2 நேற்று திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகம் சமூக ரீதியாக பெரிய விவாதங்களை கிளப்பிய நிலையில், இரண்டாம் பாகம் எந்த திசையில் பயணிக்கிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், திரௌபதி 2 படத்தை பார்த்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் திரைப்பட விமர்சகர் செய்யாறு பாலு. அவர் பேசிய விஷயங்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

திரௌபதி 2 ரிவ்யூ
படம் குறித்து பேச ஆரம்பித்த செய்யாறு பாலு, "திரௌபதி முதல் பாகம் போலவே நாடக காதல் பற்றிதான் இரண்டாம் பாகமும் இருக்கும் என்று பலர் நினைத்திருந்தார்கள். ஆனால் மோகன் ஜி இந்த முறை வேறொரு பாதையில் போயிருக்கிறார்" என்று கூறுகிறார்.
14-ம் நூற்றாண்டை மையமாக கொண்ட கதை
திரௌபதி 2 படம், 14-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை பகுதியை மையமாக கொண்டு நகர்கிறது. அந்த காலகட்டத்தில் காடவராயர்கள், வீர வல்லவராயர்கள், சம்பூர்வராயர்கள் போன்ற குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த சூழலில், சுல்தானின் படை தென் பகுதிகளுக்குள் நுழைகிறது.
ஒருபுறம் இந்துக்களின் கடவுள் சிலைகள் உடைக்கப்படுகின்றன, மறுபுறம் கடுமையான வரிகள் விதிக்கப்படுகின்றன. வரி கட்ட முடியாதவர்களுக்கு "எங்கள் மதத்திற்கு மாறினால் வரி இல்லை" என்ற வகையில் மத மாற்ற அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, சில புனை கதைகளையும் சேர்த்து திரௌபதி 2 உருவாக்கப்பட்டுள்ளதாக செய்யாறு பாலு கூறுகிறார்.
பிளஸ் பாயிண்ட்ஸ்
படத்தின் பலமாக முதலில் சொல்லப்படுவது அதன் காட்சியமைப்பு.
"14-ம் நூற்றாண்டு கதை என்பதால் செட், அரண்மனை அமைப்பு, உடைகள், குதிரைகள், சிஜி வேலைகள் எல்லாமே கண்களுக்கு விருந்தாக இருக்கிறது" என்று செய்யாறு பாலு பாராட்டுகிறார்.
குறிப்பாக ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக இருப்பதாகவும், ஜிப்பரான் இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சில பாடல்கள் படத்தின் ஓட்டத்தை இன்னும் வலுவாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமகாலத்தில் நடக்கும் காட்சிகளில் இருந்து கதை தொடங்கி, ஃபிளாஷ்பேக்கிற்குள் சென்று, விறுவிறுப்பான திருப்பத்துடன் இடைவேளை வருவது படத்தின் முக்கியமான பிளஸ் என்று அவர் சொல்லியுள்ளார்.
மைனஸ் பாயிண்ட்ஸ்
ஆனால், படத்தின் இரண்டாம் பாதி குறித்து செய்யாறு பாலு சற்று விமர்சனமாக பேசுகிறார்.
"முதல் பாதியில் சொன்ன விஷயங்களே மீண்டும் மீண்டும் திரும்ப வருவது போல சில காட்சிகள் அமைந்திருக்கிறது. அதனால் பல இடங்களில் 'இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி' ஒரு உணர்வு வருகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், படத்தில் அதிகமான கதாபாத்திரங்கள் இருப்பதால், சிலர் எதற்காக வருகிறார்கள் என்ற குழப்பமும் ஏற்படுகிறது. படத்தின் நீளம் சுமார் 2 மணி 45 நிமிடம் இருப்பதும் ஒரு குறையாக அவர் குறிப்பிட்டுள்ளார். "இதை கொஞ்சம் குறைத்திருந்தால், படம் இன்னும் கூர்மையாக இருந்திருக்கும்" எனவும் கூறியுள்ளார்.
பிம்பத்தை மாற்றிய படம்
முக்கியமாக, மோகன் ஜி மீது இருந்த ஒரு பொதுவான எண்ணத்தை இந்த படம் உடைத்துள்ளதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். "மோகன் ஜி படம்னா ஒரு குறிப்பிட்ட வகை விஷயங்கள் தான் இருக்கும் என்ற நினைப்பை இந்த படம் மாற்றுகிறது.
மத சார்ந்த விஷயம் பேசப்பட்டாலும், இது ஒரு சரித்திரக் கதையாகவே நகர்கிறது. ஆனாலும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்" என்று அவர் தனது விமர்சனத்தை முடித்துள்ளார்.
திரௌபதி 2 - வசூல் நிலவரம்
வசூல் நிலவரத்தை பொறுத்தவரை, திரௌபதி 2 படம் முதல் நாளில் கலவையான ஓபனிங்கை பெற்றுள்ளது. முதல் பாகம் போலவே ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டம் திரையரங்குகளுக்கு வந்தாலும், மாஸ் ஆடியன்ஸ் அளவில் பெரிய ஓபனிங் இல்லை என்கிற தகவல்களே வெளியாகி வருகின்றன.
ஆனால், படம் குறித்த விவாதங்கள் அதிகமாக நடைபெறுவதால், வார இறுதியில் வசூல் உயர வாய்ப்பு இருப்பதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சரித்திரப் படங்களை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.
திரௌபதி 2 என்பது அனைவருக்கும் பிடிக்கும் மாஸ் படம் அல்ல. ஆனால், சரித்திர பின்னணியுடன் உருவான வித்தியாசமான முயற்சி என்று செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். திரைக்கதை சற்று சுருக்கமாக இருந்திருந்தால், இது இன்னும் வலுவான சரித்திரப் படமாக மாறியிருக்கும் என்றே அவரது மொத்த கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications